மும்பை : புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் - யுபி யுத்தா அணிகள் இடையே ஆன லீக் போட்டி டை ஆனது. மற்றொரு போட்டியில் குஜராத் அணியின் வெற்றி நடையை தடுத்து நிறுத்தியது யு மும்பா அணி.
தெலுகு டைட்டன்ஸ் - யுபி யுத்தா அணிகள் இடையே ஆன போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் போட்டியின் பல நேரங்களில் ஒரே புள்ளிகளை பெற்று இருந்தனர்.
மேலும், போட்டியின் கடைசி நிமிடத்தில் டெக்னிகல் புள்ளி மூலம் போட்டியை டை செய்தார் தெலுகு அணியின் சித்தார்த். தெலுகு அணி தவறு செய்யவில்லை என்றால், அந்த அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும்.
முதல் பாதியில் இரு அணிகளும் 11 - 11 என சம நிலையில் இருந்தன. போட்டியின் 36வது நிமிடத்தில் இரு அணிகளும் 19 - 19 புள்ளிகள் பெற்று யாருக்கு வெற்றி என தெரியாத நிலையில் ஆடி வந்தன.
கடைசி நேரத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் ஒரு புள்ளி பெற்றார். அதே நேரத்தில் தெலுகு வீரர் ஒருவர் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் ஒரு டெக்னிக்கல் புள்ளி பெற்றது யுபி யுத்தா. அதனால், போட்டி 20 - 20 என சம நிலையை எட்டி டை ஆனது.
மற்றொரு போட்டியில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த குஜராத் அணியின் வெற்றி நடையை தன் சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தியது மும்பா அணி.
மும்பா அணி குஜராத் அணியின் டிஃபன்ஸ் வீரர்களை குறி வைத்து வெளியேற்றியதால் போட்டி மும்பா அணிக்கு சாதகமாக மாறியது. முதல் பாதியிலேயே மும்பா அணி 15 - 24 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் குஜராத் அணி இன்னும் மோசமாக ஆடியது. இறுதியில் யு மும்பா அணி 32 - 20 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணி தன் சொந்த மண்ணில் பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.