விசாகப்பட்டினம்: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரில் நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள விஸ்வநாத் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், நடப்பு சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, உபி யோதாஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் 11 புள்ளிகள் பின்தங்கி தோல்வியின் விளிம்பில் இருந்த ஹரியானா அணி, நம்பமுடியாத எழுச்சியுடன் மீண்டு வந்து 37-32 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு ஹரியானா அணியின் தடுப்பாட்ட வீரர்களான ராகுல் சேத்பால் மற்றும் ராகுல் அஹ்ரி ஆகியோரின் அசத்தலான ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் 'ஹை ஃபைவ்' (ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட டேக்கிள் புள்ளிகள்) எடுத்து அசத்தினர். ரைடிங்கில் நவீன் குமார் மற்றும் மயங்க் சைனி ஆகியோர் முக்கிய பங்களிப்பை அளித்தனர். உபி யோதாஸ் அணிக்காக ககன் கவுடா 'சூப்பர் 10' (10 ரைடு புள்ளிகள்) எடுத்தும், அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே உபி யோதாஸ் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ககன் கவுடா தனது முதல் ரைடிலேயே இரண்டு புள்ளிகளைப் பெற்று அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். தடுப்பாட்டத்தில் ஹிதேஷ், ஹரியானா ரைடர் சிவம் படாரேவை மடக்கிப் பிடித்தார். பவானி ராஜ்புத் தனது பங்கிற்கு வெற்றிகரமான 'டூ-ஆர்-டை' ரைடை நிகழ்த்தினார். இதனால், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே உபி யோதாஸ் அணி முன்னிலை பெற்றது.
போட்டி தொடங்கிய ஒன்பதாவது நிமிடத்திலேயே, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கிய உபி யோதாஸ், 10-4 என ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஹரியானா அணியின் ராகுல் அஹ்ரி ஒரு டேக்கிள் புள்ளி எடுத்து அணியை மீட்க முயன்றார். ஆனால், ககன் கவுடா ஒரு அற்புதமான 'சூப்பர் ரைடு' மூலம் உபி யோதாஸின் முன்னிலையை மேலும் அதிகரித்தார்.
தொடர்ந்து அழுத்தம் கொடுத்த உபி யோதாஸ் அணி, தங்களது முன்னிலையை பத்து புள்ளிகளாக உயர்த்தியது. முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில், ஜெய்தீப் தஹியா ஒரு 'சூப்பர் டேக்கிள்' செய்து ஹரியானா அணிக்குச் சற்று ஆறுதல் அளித்தார். நவீன் குமாரின் சில வெற்றிகரமான ரைடுகளால், முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 12-17 என ஐந்து புள்ளிகள் பின்தங்கியிருந்தது.
இரண்டாம் பாதியில் ஆட்டம் தலைகீழாக மாறியது. நடப்பு சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, தங்களது உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நவீன் குமாரின் தொடர்ச்சியான ரைடுகளும், ராகுல் சேத்பாலின் சிறப்பான தடுப்பாட்டமும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ககன் கவுடாவை ராகுல் சேத்பால் தடுத்து நிறுத்தியதன் மூலம், உபி யோதாஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கிய ஹரியானா அணி, 19-19 என ஸ்கோரை சமன் செய்தது.
அதன்பிறகு, இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடின. ஒவ்வொரு புள்ளிக்கும் இடையில் தீவிரமான போட்டி நிலவியது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது, உபி யோதாஸ் அணி 24-23 என ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது.
ககன் கவுடா தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்து உபி அணியை முன்னிலையில் வைத்திருக்க முயன்றார். ஆனால், ஹரியானா வீரர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. தாக்குதல் ஆட்டத்தில் நவீன் குமார் தீப்பொறியாகச் செயல்பட, தடுப்பாட்டத்தில் ராகுல் அஹ்ரி தனது 'ஹை ஃபைவ்'-ஐ நிறைவு செய்தார். இதனால், ஹரியானா அணி மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், ராகுல் சேத்பாலும் தனது 'ஹை ஃபைவ்'-ஐ நிறைவு செய்ய, ஹரியானாவின் முன்னிலை ஐந்து புள்ளிகளாக உயர்ந்தது. கடைசி நேரத்தில் மயங்க் சைனியும் தனது பங்களிப்பை அளிக்க, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வந்து 37-32 என்ற புள்ளி கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.