விசாகப்பட்டினம்: 2025 புரோ கபடி லீக் (பிகேஎல்) தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி வினாடியில் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணம் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் தான். தமிழ் தலைவாஸ் அணியில் தனது புதிய பயணம் பற்றி மனம் திறந்து இருக்கிறார் பவன்.
பவன் செராவத்துக்கும், தமிழ் தலைவாஸ் அணிக்கும் இடையேயான பந்தம் மிகவும் உணர்வுபூர்வமானது. புரோ கபடி லீக் ஒன்பதாவது சீசனில், அவரை வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்தது தமிழ் தலைவாஸ் அணி.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் மஞ்சள் ஜெர்சி அணிந்து களமிறங்கிய அவருக்கு, அந்த சீசனின் முதல் போட்டியிலேயே முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனால், அந்த சீசன் முழுவதிலிருந்தும் அவர் விலக நேர்ந்தது. அது அவருக்கும், தமிழ் தலைவாஸ் அணிக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அதன்பிறகு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தற்போது மீண்டும் தமிழ் தலைவாஸ் அணிக்கே திரும்பியுள்ளார். இந்த முறை, ₹59.50 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டுள்ள அவர், ஒரு புதிய சவாலை ஏற்றுக்கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.

"ஒரு புதிய அணிக்குச் செல்லும்போது, ஒரு புதிய சவாலை ஏற்றுக்கொள்வதை நான் விரும்புகிறேன். இதற்கு முன்பும் நான் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்தேன். ஆனால், அப்போது என்னால் சரியாக விளையாட முடியவில்லை. எனவே, இது எனக்கு ஒரு சவால். என் மீது நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொறுப்பைக் கொடுக்கும்போது, அந்தச் சவாலுடன் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று பவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த முறை பவன் செராவத் தனியாக இல்லை. அவருடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ரைடர் அர்ஜுன் தேஷ்வாலும் இணைந்துள்ளார். இந்த இருவரின் கூட்டணி, தமிழ் தலைவாஸ் அணியின் ரைடிங்கிற்கு பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. இதுவரை நடந்துள்ள போட்டிகளில், அணியின் மொத்த ரைடுகளில் கிட்டத்தட்ட 83 சதவீதத்தை இந்த ஜோடியே மேற்கொண்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணியின் மொத்த ரைடு புள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் இவர்களே எடுத்துள்ளனர். இதில், அர்ஜுன் தேஷ்வால் சற்று முன்னிலையில் இருக்கிறார். பவன் சற்று பின்தங்கி இருக்க காரணமே அவரது அணுகுமுறை மாற்றம் தான்.
"இந்த ஆண்டு எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை விட, நமது வசதியான வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லது. அணி எப்படிச் சிறப்பாக விளையாட முடியும் என்பது போன்ற பல விஷயங்களை நான் இப்போது கற்றுக்கொள்கிறேன்" என்றார் பவன்.
இந்த சீசனின் தொடக்கம் தமிழ் தலைவாஸ் அணிக்கு கலவையான முடிவுகளையே கொடுத்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏழு புள்ளிகள் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து மீண்டு வந்து பவனின் ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த போட்டியில் யு மும்பா அணிக்கு எதிராக ஒன்பது புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தும், இறுதியில் தோல்வியைத் தழுவியது.
இந்த ஏற்ற இறக்கமான தொடக்கம் குறித்துப் பேசிய கேப்டன் பவன், "முதல் போட்டியில், நாங்கள் பின்தங்கியிருந்தபோது யாரும் நாங்கள் வெல்வோம் என்று நினைக்கவில்லை. இரண்டாவது போட்டியில், நாங்கள் முன்னிலையில் இருந்தும் தோல்வியடைந்தோம். இதிலிருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நீங்கள் பின்தங்கியிருந்தால் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அதேபோல, நீங்கள் முன்னிலையில் இருந்தால், உங்களை யாரும் வீழ்த்த முடியாது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது" என்று குறிப்பிட்டார்.
சீசனின் தொடக்கம் சற்று தடுமாற்றத்துடன் இருந்தாலும், அணியின் அனுபவமிக்க கேப்டனான பவன் செராவத்தின் வழிகாட்டுதலில், தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.