சென்னை: புரோ கபடி தொடரில் பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கபடிக்கு பெயர் போன தமிழ்நாட்டு பெயரை வைத்துக் கொண்டு புரோ கபடி தொடரில் மோசமான ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெளிப்படுத்தி வருகிறது.
தற்போது நடந்து முடிந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி, புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தையே பிடித்தது. இதன் மூலம் டாப் 8 இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி தவறவிட்டது.

இந்த சீசன் பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனதாக தமிழ் தலைவாஸ் அமைந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரும் அணியின் கேப்டனுமான பவன் சராவத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் அதிரடியாக அணியை விட்டு நீக்கப்பட்டார். அணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என தமிழ் தலைவாஸ் அணி குற்றச்சாட்டியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பவன் செராவத், தம்மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் கபடி போட்டியில் இருந்தே ஓய்வு பெற்று விடுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அணியின் பயிற்சியாளரான சஞ்சீவ் பாலியான் கடைசிப் போட்டியில் தோல்வியை தழுவிய பின் செய்தியாளர்களை சந்தித்து தமிழ் தலைவாஸ் நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதில் தமக்கு முழு சுதந்திரத்தை அணி நிர்வாகம் வழங்கவில்லை என்றும், வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகம் தலையிட்டதாகவும் கூறியுள்ளார். இதேபோன்று உடல் தகுதி இல்லாத வீரர்களை அணியில் தொடர்ந்து தேர்வு செய்ய அணி நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும் சஞ்சீவ் பாலியான் கூறியிருந்தார்.
இந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ் தலைவாஸ் அணி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அதில் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியானின் குற்றச்சாட்டுகளை தாங்கள் நிராகரிப்பதாகவும் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும் கூறி இருக்கிறது. அணி தேர்வு, வீரர்களை தக்க வைக்கும் முடிவு என அனைத்தையுமே அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த தொடரின் போது 16 முறை செய்தியாளர்கள் சந்திப்பை சஞ்சீவ் பாயான் புறக்கணித்ததாகவும் தமிழ் தலைவாஸ் குறிப்பிட்டுள்ளது. தங்கள் அணிக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணி, புதிய பயிற்சியாளர் உடன் இணைந்து மீண்டும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது.