டெல்லி: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புனேரி பல்தான் அணி, 50-45 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குக் கம்பீரமாக முன்னேறியது.
டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி நிமிடம் வரை அனல் பறந்தது. இந்த வெற்றியின் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது புனேரி பல்தான். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில், தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ரைடர்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்தது. புனேரி பல்தான் அணிக்காக ஆதித்யா ஷிண்டே 21 புள்ளிகளும் மற்றும் பங்கஜ் மோஹிதே 10 புள்ளிகளும் எடுத்து, 'சூப்பர் 10' அடித்து அசத்தினர். மறுபுறம், தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக பாரத் ஹூடா 22 புள்ளிகளும், விஜய் மாலிக் 10 புள்ளிகளும் எடுத்து 'சூப்பர் 10' அடித்தபோதிலும், அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே தெலுங்கு டைட்டன்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பாரத் ஹூடாவின் அபாரமான 'சூப்பர் ரைடு' மூலம், புனேரி பல்தான் அணியை முதல் முறையாக 'ஆல் அவுட்' ஆக்கியது. இதனால், டைட்டன்ஸ் அணி 10-1 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
ஆரம்பத்தில் தடுமாறினாலும், பங்கஜ் மோஹிதேவின் தொடர்ச்சியான ரைடுகள் மூலம் புனேரி பல்தான் அணி மெல்ல மெல்ல மீண்டது. முதல் பாதியின் முடிவில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 24-20 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல் பாதியிலேயே பாரத் ஹூடா 14 புள்ளிகளை எடுத்து தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்தார்.
இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே புனேரி பல்தான் அணி, டைட்டன்ஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கிப் பதிலடி கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணிகளும் மாறி மாறிப் புள்ளிகளைப் பெற, ஆட்டம் 33-33 எனச் சமநிலைக்கு வந்தது.
போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், கேப்டன் அஸ்லாம் இனாம்தாரின் முக்கியமான டேக்கிள் மூலம் தெலுங்கு டைட்டன்ஸை மூன்றாவது முறையாக 'ஆல் அவுட்' ஆக்கியது புனேரி பல்தான். இதன் மூலம், போட்டியிலேயே முதல் முறையாக புனேரி அணி முன்னிலை பெற்றது.
அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட இளம் ரைடர் ஆதித்யா ஷிண்டே, ஒரே ரைடில் நான்கு புள்ளிகளை அள்ளி, ஒரு அற்புதமான 'சூப்பர் ரைடு' மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது புனேரி பல்தான் அணியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து, டைட்டன்ஸ் அணியை மீண்டும் ஒரு முறை 'ஆல் அவுட்' ஆக்கி, இரண்டு நிமிடங்களுக்குள் ஏழு புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது.
தொடக்கத்தில் ஒன்பது புள்ளிகள் பின்தங்கியிருந்த புனேரி பல்தான் அணி, இறுதியில் 50-45 என்ற புள்ளிக்கணக்கில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தபாங் டெல்லி - புனேரி பல்தான் மோதும் இறுதிப் போட்டி அக்டோபர் 31 அன்று நடைபெற உள்ளது.