சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட், நிச்சயம் கேப்டனாக வருவார் என்று 2020ஆம் ஆண்டே அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2008 முதல் 2023 வரை கேப்டனாக செயல்பட்ட தோனியின் கடைசி சீசன் இது என்பதால், எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், ஒவ்வொரு சீசனிலும் சிறப்பான பேட்டிங் மூலமாக அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தோனியை போலவே அமைதியாக நிதானமாக முடிவு எடுக்கும் சுபாவத்தை கொண்டவர் ருதுராஜ் கெய்க்வாட். அதுமட்டுமல்லாமல் 27 வயது மட்டுமே எட்டியுள்ளதால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் எதிர்கால கேப்டனாக வருவார் என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் 2020ஆம் ஆண்டு கணித்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின், சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சொந்த பிரச்சனைகள் காரணமாக சுரேஷ் ரெய்னா திடீரென சொந்த ஊர் திரும்பினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ரெய்னா மீண்டும் அந்த சீசனில் விளையாட மாட்டேன் என்று அறிவித்தார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.
அப்போது செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் பேசுகையில், மகாராஷ்டிராவில் இருந்து ஒரு பையனை ஏலத்தில் வாங்கி இருக்கிறோம். அனைவரும் அவரின் பேட்டிங்கை பார்க்க வேண்டும். அவர் வேறு மாதிரியான வீரராக தெரிகிறார். ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அவர் எதிர்காலத்தில் சிஎஸ்கே கேப்டனாகவும் வாய்ப்புள்ளது. அந்த பையனிடம் அவ்வளவு திறமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கணித்ததை போலவே, இன்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம், மகாராஷ்டிரா அணியை வழிநடத்திய அனுபவத்தை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றது குறிப்பிடத்தக்கது.