அரையிறுதியில் தோற்ற இந்தியா
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய கடந்த 2015ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்று பதக்கத்தை தவற விட்டது.
நினைவுகூர்ந்த முகமது ஷமி
இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடியபோது தன்னுடைய கால் மூட்டில் முறிவு ஏற்பட்டதாகவும், தான் தொடரிலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது, அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தன்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து விளையாட ஊக்குவித்ததாகவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இர்பான் பதானுடன் உரையாடல்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், வீரர்கள் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மூலமாக லைவ் நிகழ்ச்சிகளில் ஒருவருடன் ஒருவர் உரையாடி வருகின்றனர். இந்த உரையாடல்களில், அவர்களின் கடந்த காலங்களின் மலரும் நினைவுகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, இர்பான் பதானுடன் உரையாடி, தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
2015 உலக கோப்பை குறித்து ஷமி
இந்நிலையில், கடந்த 2015ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே தன்னுடைய காலில் முறிவு ஏற்பட்டதாகவும் ஆனால், தன்மீது நம்பிக்கை வைத்து அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி, தன்னை தொடர்ந்து ஆட வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வலியை பொறுத்துக் கொண்டால் உலக கோப்பையில் விளையாடலாம் என்று தோனி அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடினமான காலம்
தன்னுடைய தொடையும் கால் மூட்டும் ஒரே அளவில் இருந்ததாகவும், வலியை கட்டுப்படுத்த தான், வலிநிவாரண மாத்திரைகளையும் ஊசிகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வலிகளுடன் விளையாடி, தொடரின் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய அதாவது 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பௌலர் என்ற சிறப்பை தான் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். அணியின் உமேஷ் யாதவ் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.