டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது நீதிபதி லோதா கமிட்டி. இதனால் அந்த அணிகளுக்காக தற்போது ஆடிவரும் வீரர்கள் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூதாட்ட புகாரை தொடர்ந்து இவ்விரு அணிகளையும் 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக லோதா கமிட்டி இன்று அறிவித்தது.

சென்னை அணியில் இந்திய கேப்டன் டோணி போன்ற சீனியர் வீரர்கள் ஆடி வருகின்றனர். எனவே அடுத்த இரு ஆண்டுகளுக்கும், அவர்கள் ஐபிஎல் தொடர்களில் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து லோதாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், இந்த தடை அணிகளுக்கானது. வீரர்களுக்கு தொடர்பில்லை. அவர்கள் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம், ஐபிஎல் போட்டிகளில் ஆட தடையில்லை என்றார். மேலும் வீரர்கள் பாதிக்கப்படுவார்களே என்று பார்க்க முடியாது. பொது நலன் என்று வரும்போது, தனிப்பட்டவர்கள் நலனை பார்க்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் ஆடி வருகின்றன. இரு அணிகளுக்கு தடையுள்ள நிலையில், 6 அணிகள் மட்டுமே ஆடுவது சுவாரசியம் தராது. எனவே புதிதாக இரு அணிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், தற்போது தடை செய்யப்பட்ட அணிகளை வேறு உரிமையாளர்கள் வாங்கவும் வாய்ப்புள்ளது.
புதிய அணி உருவாக்கப்பட்டால் மறு ஏலம் போன்ற நடைமுறைகள் அமலுக்கு வரும். இதனால் வீரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். ஆனால், அவர்கள் எந்த அணிக்காகவும் விளையாட முழு சுதந்திரம் பெற்றவர்களாகும். எனவே தற்போதைய சிஎஸ்கே கேப்டன், டோணி எந்த அணிக்கு வேண்டுமானாலும் விளையாட முடியும். அல்லது சென்னை தனது உரிமையாளரை மாற்றினால் இங்கேயே தொடரவும் வாய்ப்புள்ளது.