சென்னை: எம்எஸ் தோனி போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளுக்கும் ஒன்று முதல் இரு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இதுவரை எந்த அணியும் இறுதி செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. அதேபோல் நடப்பு சீசன் தொடங்கியது முதல் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று பார்க்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு முறை சென்னை அணி வெளிமாநில மைதானங்களில் விளையாடிய போதும், சென்னை அணியின் ரசிகர்கள் மைதானங்கள் முழுக்க சூழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் எதிரணி ரசிகர்களும் தோனியை பார்க்கப்பதற்காகவே மைதானங்களுக்கு வந்தனர். அதேபோல் எதிரணி வீரர்கள், ஜாம்பவான் வீரர்களும் கூட தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டனர். இதனால் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் சென்னை அணி கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மைதானம் முழுக்க வலம் வந்து தோனியும், சென்னை அணி வீரர்களும் நன்றி தெரிவித்தனர். அப்போது திடீரென வந்த சுனில் கவாஸ்கர், தோனியுடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராஃப் போட, இருவரும் கட்டபிடித்து அன்பை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவம் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், "எம்எஸ் தோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தான் வருவார்கள்" என்று பாராட்டியுள்ளார். வாழ்நாளில் எத்தனையோ சாதனைகள், எத்தனை வீரர்களை பார்த்துள்ள சுனில் கவாஸ்கர், தோனியை புகழ்ந்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ள சம்பவம் ஐபிஎல் தொடரின் மிகமுக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.