மும்பை: இந்திய அணிக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் தான் பேஸ் பால் முறையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு ரியல் சோதனை என்று அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் அடுத்ததாக டெஸ்ட் போட்டிகள் மீது கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் ஜனவரி மாதம் இறுதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால் சொந்த மண்ணில் பேஸ் பால் ஆட்ட முறையில் இங்கிலாந்து அணி பிளாட் பிட்ச்களை பயன்படுத்தி அதிரடியாக வெற்றிகளை குவித்து வந்தது. இதனால் அதேபோன்ற ஆடுகளங்கள் உள்ள பாகிஸ்தானிலும் வெற்றியை பெற்றது. ஆனால் பேஸ் பால் ஆட்ட முறைக்கு எதிரான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இங்கிலாந்து அணி விளையாடியதில்லை.
அதில் இந்தியா போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணி எப்படி பேஸ் பால் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசுகையில், இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. சிறந்த அணிக்கு எதிராக சவாலை எதிர்கொள்வதற்காக ஆவலாக உள்ளேன்.
சொந்த மண்ணில் இந்திய அணி எவ்வளவு பலமிக்க அணி என்று அனைவருக்கும் தெரியும். பேஸ் பால் ஆட்டத்தை முயற்சிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துள்ளேன். அதனை இப்போது செய்ய வருகிறேன். அதேபோல் பேஸ் பால் அணுகுமுறைக்கு உடனடியாக வெற்றி கிடைத்திருப்பதை எங்களின் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அதேபோல் கடந்த 18 மாதங்களில் இங்கிலாந்து வீரர்கள் பலரும் தங்களின் திறமையை கூடுதலாக வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் ஒரு அணியின் தலைவனின் வேலையாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.