முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியா கடந்த 2018ல் தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தன்னுடைய முதுகு வலிக்காக கடந்த ஆண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா, கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தற்போது முடங்கியுள்ளார். சர்வதேச போட்டிகள் மீண்டும் துவங்குவதற்காக காத்திருக்கிறார்.
அப்பாவாகும் சந்தோஷம்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இவருக்கும் பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமூக வலைதளம் மூலமாக இதை உலகிற்கும் தெரியப்படுத்தினார் பாண்டியா. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் அப்பாவாக போவதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனித்துவம்
இதனிடையே 'கிரிக்பஸ் இன் கான்வர்ஷேசன்' என்ற நிகழ்ச்சிக்காக பேசிய பாண்டியா, தன்னுடைய முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது தற்போது தனக்கு மிகுந்த சவாலானது என்று தெரிவித்துள்ளார். வேறு வழியே இல்லையென்றால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தலாம். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய தனித்துவத்தை தான் உணர்ந்துள்ளதாக பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியா உருக்கம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்தும் பாண்டியா உருக்கம் தெரிவித்துள்ளார். கடந்த 2015ல் அவர் தனக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியதாகவும், தனக்கு ஒரு தந்தையாகவே அவர் செயல் புரிந்ததாகவும் கூறியுள்ளார். கிரிக்கெட் குறித்து தான் கற்றுக் கொண்டதெல்லாம் இந்த ஆரம்ப காலகட்டத்தில்தான் என்றும் பாண்டியா தெரிவித்துள்ளார்.