வாரணாசி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் பிரம்மாண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார்
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றார். அந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதியநாத்தும் கலந்து கொண்டார். அவர் பிரதமரை வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பிசிசிஐ கட்ட உள்ளது. பிரதமர் மோடி துவங்கி வைக்கும் இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர், திலிப் வெங்க்சர்க்கார், மதன் லால், ஜி விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து மத கடவுளான சிவனை அடிப்படையாக கொண்டு இந்த மைதானம் கட்டப்பட உள்ளது. வாரணாசியில் உள்ள காசி சிவன் கோவில் உலகப் பிரசித்தம் என்பதால், அதையே மையமாக கொண்டு இந்த மைதானம் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரை திரிசூலத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. மைதானத்தின் உயர் அழுத்த மின் விளக்குகள் உடுக்கை வடிவில் இருக்கும் வகையில் அமைக்கப்படும். இந்த மைதானத்தின் நுழைவு வாயில் வில்வ இலை வடிவில் அமைக்கப்பட உள்ளது. மைதான இருக்கைகள் கங்கை கரையின் வடிவில் அமைக்கப்படும்.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பிரதமர் மோடி இந்த மைதானத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கு நன்றி கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இன்று இந்த உலகம் கிரிக்கெட் மூலம் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளது. பல நாடுகள் கிரிக்கெட் விளையாடத் துவங்கி இருப்பதால் இனி கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நமக்கு அதிக கிரிக்கெட் மைதானங்கள் தேவைப்படும். பனாரஸ் (வாரணாசி) கிரிக்கெட் மைதானம் அந்த தேவையை பூர்த்தி செய்யும். இந்த மைதானத்தை கட்டுவதில் பிசிசிஐ முக்கிய பங்கு வகிக்கும். நான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என்றார்.