கொழும்பு: இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சனிக்கிழமை அன்று 1996 ஒருநாள் போட்டி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி வீரர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த அணியினருடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும், அந்த அணி எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

"கிரிக்கெட் இணைப்பு! 1996ல் உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த அணி எண்ணற்ற விளையாட்டுப் பிரியர்களின் கற்பனையைக் கவர்ந்தது!" என்று மோடி தனது பதிவில் பதிவிட்டிருந்தார்.
இந்த சந்திப்பில், அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூர்யா உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இருப்பினும், உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் அர்ஜுனா ரணதுங்கா, இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. தற்போது வெளிநாட்டில் இருப்பதால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தியப் பிரதமரைச் சந்தித்தது குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். அவரை புகழ்ந்து பேசினார்கள். ரமேஷ் களுவிதரானா பேசுகையில் - "பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து அவரது தலைமைத்துவத்தால் இலங்கை பயனடைந்துள்ளது. நெருக்கடியான காலங்களில் இந்தியா அளித்த ஆதரவுக்கும், கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்கான நிதி உதவிக்கும் நன்றி." என்றார்.
முன்னாள் இலங்கை கேப்டன் மார்வன் அத்தப்பட்டு பேசுகையில், "இந்தியாவை இத்தகைய உயரத்திற்குக் கொண்டு சென்ற தலைவரான பிரதமர் மோடியைச் சந்தித்தது ஒரு அசாதாரண அனுபவம்... இது ஒரு கனவு நனவானது போன்றது." என்றார்.
குமார் தர்மசேனா பேசுகையில், "இது போன்ற ஒரு தலைவரை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இது அருமையாக இருந்தது. இலங்கையின் மாபெரும் அண்டை நாட்டின் தலைவர் என்ற வகையில், அவர் நம் நாட்டிற்கு மிகுந்த ஆதரவை வழங்கியுள்ளார்." என்றார்.
அரவிந்த டி சில்வா பேசுகையில், "அவர் உலகளவில் பெரிதும் மதிக்கப்படுபவர், இந்தியாவுக்காக அவர் நிறைய செய்துள்ளார்... தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருப்பது குறிப்பிடத்தக்கது." என்றார்.
சமிந்தா வாஸ் பேசுகையில், "பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது பெருமைக்குரியது. நாங்கள் விளையாட்டு பற்றியும், 1996ல் நாங்கள் இலங்கை உலகக் கோப்பையை வென்றது குறித்தும் பேசினோம். பிரதமர் மோடி தெற்காசியாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர், அவரது கிரிக்கெட் அறிவு மிகவும் சிறந்தது." என்றார்.
சனத் ஜெயசூர்யா பேசுகையில், "பிரதமர் மோடியைச் சந்தித்தது ஒரு சிறந்த அனுபவம். அவர் ஒரு தேசமாக இந்தியாவை எப்படி மேம்படுத்தினார் என்பதை அழகாக விளக்கினார்." என்றார்.