டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த 2025 மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது கையிலிருந்த டாட்டூவையும், இன்ஸ்டாகிராம் பயோவில் இருந்த வாசகத்தையும் கவனித்துப் பேசியது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், பெருமையையும் அளித்ததாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தீப்தி சர்மாவை 'டிஎஸ்பி' என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவரது இடது கையில் இருந்த அனுமன் டாட்டூவைத் தான் கவனித்ததாகக் கூறினார். மேலும், தீப்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதப்பட்டிருந்ததையும் தான் பார்த்ததாகக் குறிப்பிட்டார். இந்த எதிர்பாராத உரையாடல் குறித்து பின்னர் அளித்த பேட்டியில் தீப்தி சர்மா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

"அது ஒரு அற்புதமான அனுபவம். பிரதமரைச் சந்திப்பதற்காக நாங்கள் காத்திருந்தபோது, அந்தத் தருணம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருந்தோம். அவரைச் சந்தித்தபோது மிகவும் நன்றாக உணர்ந்தோம். அவர் அனுமன் ஜீ-யைப் பற்றிக் குறிப்பிட்டு, எனது இன்ஸ்டாகிராம் பயோ குறித்தும் பேசினார். 'நான் உங்கள் சுயவிவரத்தைப் பார்த்தேன்; நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதியுள்ளீர்கள்' என்று அவர் கூறினார்."
"இவ்வளவு பெரிய தலைவரிடமிருந்து இதைக் கேட்பதும், அவர் எங்களைப் பின்தொடர்கிறார், எங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார் என்பதும் நம்பமுடியாததாக இருந்தது. 'தொடர்ந்து முன்னேறுங்கள், கடினமாக உழையுங்கள், என் ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் உண்டு' என்று அவர் கூறினார். அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது" என்று தீப்தி சர்மா கூறினார்.
இந்தியா உலகக் கோப்பையை வென்றதில் தீப்தி சர்மா தனது ஆல்-ரவுண்டர் திறமையால் முக்கியப் பங்காற்றினார். 28 வயதான அவர், இந்தத் தொடரில் மூன்று அரை சதங்களுடன் 7 இன்னிங்ஸ்களில் 215 ரன்கள் குவித்து, தொடர் நாயகி விருதைத் தட்டிச் சென்றார். பந்துவீச்சிலும் அசத்திய தீப்தி, 9 இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார்.
குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங்கில் 58 பந்துகளில் 58 ரன்கள் குவித்ததோடு, பந்துவீச்சில் 9.3 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி ஒருநாள் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையிலும் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி, 392 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.