
மித்தாலி
1999ம் ஆண்டு கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய மிதாலி ராஜ், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அடித்த 2வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய 2 பெருமைகளைப் பெற்றார். மேலும் அவர், ஒரு நாள் போட்டியில் 7,000 ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை என்கிற சாதனையையும் படைத்தார்.

பிரதமர் மோடி
இந்நிலையில் இன்று 75வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதேச அளவில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நீண்ட வருடங்களாக அவரின் உழைப்பும், வாழ்வும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் கிரிக்கெட்டர்களுக்கும் ஓர் உதாரணம் எனத் தெரிவித்தார்.

பெண் சாதனைகள்
மேலும் அவர், நாம் மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த மார்ச் மாதத்தில் பல வீராங்கனைகள் பதக்கங்களை வென்றும், சாதனைகள் படைத்தும் வருகின்றனர். டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தங்கப்பதக்கப் பட்டியலிலும் இந்தியா உச்சத்தில் உள்ளது. இதில் ஆண்களும், பெண்களும் சிறப்பாக ஆடினர். பி.வி.சிந்துவும் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என பிரதமர் பாராட்டினார்.

இந்தியா முதலிடம்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 13 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பாராட்டியிருப்பது அதில் கலந்துக்கொண்டுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கமளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











