டெல்லி : மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டிக்கு முன்பு எதுவுமே பெரிதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதவுள்ளன. இந்திய நேரப்படி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி துவங்கவுள்ளது.

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்தப் போட்டிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடியும் இந்தியா மற்றும் அஸ்திரேலிய அணிகளுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பகல் 12.30 மணியளவில் துவங்க உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இந்த போட்டியை அடுத்து மெல்போர்ன் நகரே கோலாகலமாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் இந்த போட்டியை அடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணி, 4 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது. ஆனால் இந்த தொடரில் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இரு அணிகளுமே வெற்றியை கைவசப்படுத்த தீவிரமாக உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடைபெறும் இந்தப் போட்டியில் மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு இரண்டு வலிமையான அணிகள் மோதுவதாகவும், இந்த இரவு மிக சிறந்ததாகவும் சிறந்த போட்டியை ரசிகர்களுக்கு அளிக்கப்போவதாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாரிசனுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, அவருக்கு சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்பு வேறெதும் பெரிதில்லை என்று குறிப்பிட்டுள்ள மோடி, இந்த மகளிர் தினத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளில் சிறந்த அணி வெற்றியை கைகொள்ளும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, நீலநிற மலையை போல, இந்த போட்டியின்போது மெல்போர்ன் மைதானம் நீலநிறமாக மாறும் என்றும் கூறியுள்ளார்.