டெல்லி : டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதை அடுத்து நேற்று பிரதமர் மோடியை வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அவர்கள் விருந்து உண்டனர். அதன் பிறகு பிரதமர் மோடி உடன் அமர்ந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் வீரர்கள் என்ன பேசினார்கள் என்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி உடன் பேசிய விராட் கோலி முதலில் எங்களை அழைத்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

டி 20 உலக கோப்பையை வென்றது என் வாழ்நாளில் மறக்கவே முடியாத நாளாக அமைந்து விட்டது. எனினும் என்னுடைய இதயத்தில் அணிக்காக நான் பெரிய அளவில் பங்காற்றவில்லையே என்ற சோகம் இருந்தது. இது குறித்து நான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசினேன். அணிக்கு நான் எந்த ஒரு பங்கும் ஆற்றவில்லை. என் திறமைக்கான நியாயத்தை நான் செய்யவில்லை என்று கூறினேன்.
ஆனால் ராகுல் டிராவிட் என்னிடம் உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும். நீ கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவாய் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். நானும் ரோகித் சர்மாவும் இறுதிப்போட்டியில் விளையாடிய போது நான் அவரிடம் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை என் மீது இல்லை என்று கூறினேன். ஆனால் திடீரென்று முதல் ஓவரில் நான் மூன்று பவுண்டரிகள் அடித்தேன்.
உடனே என்ன நடக்கிறது? ஒருநாள் நாம் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தடுமாறினோம். இன்று மூன்று பவுண்டரிகள் அடித்து விட்டோமே என்று நினைத்தேன். இறுதிப்போட்டியில் நாங்கள் மூன்று விக்கெட்டுகள் இழந்தவுடன், உடனே என்னுடைய கவனத்தை அணிக்காக செலுத்தினேன்.
இன்றைய ஆட்டத்தில் அணி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தினேன்.ஒரு கடினமான சூழலில் என்னை தூக்கிப் போட்டது போல் இருந்தது. அப்போது நான் என்ன நினைத்தேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. சில விஷயங்கள் கண்டிப்பாக நடந்து தீரும். அதுபோல்தான் இந்த இறுதிப் போட்டி அமைந்தது என்று பிரதமர் மோடியுடன் விராட் கோலி பேசினார்.