டெல்லி: இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சேதேஷ்வர் புஜாரா, சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்மூலம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். , புஜாரா 2010-ல் அறிமுகமாகி, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.60 சராசரியுடன் 7,195 ரன்கள் குவித்தார்.
இதில் 19 சதங்களும் 35 அரைசதங்களும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 37 வயதான புஜாராவுக்கு ஒரு உணர்ச்சிமிக்க கடிதம் எழுதி, பாராட்டினார். அதில், அன்புள்ள சேதேஷ்வர்,"நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன்."

"இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்களும் கிரிக்கெட் சமூகமும் உங்கள் அற்புதமான சாதனைகளைப் பாராட்டி உணர்ச்சிமிக்க வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளனர். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில், நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்."
"உங்கள் அசைக்க முடியாத மனநிலையும், நீண்ட நேரம் மிகுந்த கவனத்துடன் ஆடும் திறனும் உங்களை இந்திய பேட்டிங் வரிசையின் மையமாக ஆக்கியது.உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்! "
"மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள். கிரிக்கெட் மீதான உங்கள் ஆர்வம், சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தபோதிலும், சவுராஷ்டிராவுக்காகவோ அல்லது வெளிநாட்டிலோ முதல் தர கிரிக்கெட் ஆடுவதில் வெளிப்பட்டது."
"சவுராஷ்டிரா கிரிக்கெட்டுடனான உங்கள் நீண்ட கால தொடர்பும், ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பும், ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.உங்கள் தந்தை, ஒரு கிரிக்கெட் வீரராகவும் உங்கள் ஆலோசகராகவும் இருந்தவர், உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என்று நம்புகிறேன். பூஜா மற்றும் அதிதி ஆகியோர் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதில் மகிழ்ச்சியடைவார்கள்."
"அவர்கள் அனைவரும் உங்களை ஆதரிக்க பெரிய தியாகங்களைச் செய்துள்ளனர்.களத்திற்கு அப்பால், உங்கள் ஆழமான பகுப்பாய்வு ஒரு வர்ணனையாளராக கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பெரும் மதிப்பை சேர்க்கிறது, உங்கள் நுண்ணறிவுகளை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.