அரையிறுதியில் ஆஸ்திரேலியர்களை வெல்லவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ? இதோ.. சுத்தத் தமிழில் கவிஞர் மகுடேஸ்வரன் கூறும் யோசனைகள் சில...
1. ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக முதலில் மட்டையாடுவது உகந்தது. ஓட்டங்களைத் துரத்துவதில் பன்முறை வெல்வதுபோலிருந்து அருகே நெருங்கி ஒற்றை ஓட்டம் போதாமல் தோற்ற வரலாறு நமக்குண்டு.
2. முதல் ஆறு வீச்சலகுகளை எப்பாடுபட்டேனும் தாக்குப்பிடித்துவிட வேண்டும். அவர்களின் துல்லிய வீச்சு தளர்ந்தவுடன் அடித்தாடலாம். முதல் ஆறேழு வீச்சலகுகளில் ஆட்டமிழப்பு ஏதுமில்லையெனில் அவர்கள் கை ஓங்குவதில்லை.
3. ஓடுபலியாக்குவதில் (ரன்னவுட்) கைதேர்ந்தவர்கள் அவர்கள். முக்குச்சிகளுக்கு இடையே விரைந்து ஓடவேண்டும். ஐயமுள்ள இடங்களில் ஓடும் முயற்சியைத் தவிர்த்தல் நலம். களத்தடுப்பில் இன்றும் அவர்கள் தேர்ச்சிமிக்க அணியினர் என்பதை மறத்தலாகாது.
4. வீச்சலகு தவறாமல் நான்கடிக்க வேண்டும். பந்தைத் தடுத்தாடிக்கொண்டிருந்தால் அவர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றுவிடுவார்கள். 1996-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இலங்கையின் அரவிந்த டிசில்வா ஆடிய ஆட்டம் இத்தகையதே.

5. முக்குச்சிக்காரர் பின்னாடி சாதுவாகத்தான் நின்றுகொண்டிருப்பார். அதை நம்பி வரைகோட்டுக்கு வெளியே வந்துவிடக்கூடாது. முக்குச்சிக்காரரின் சமயோசிதத்தில் அவர்களுக்கு எப்போதும் பலியாள் சிக்குகிறார்.
6. அவர்களுக்குப் பந்துவீசும்போது முதல் பத்து வீச்சலகுக்குள் ஓரிருவரை ஆட்டமிழப்புக்கு உள்ளாக்க வேண்டும். அவர்களில் ஒருவர் நூறு ஈட்டிவிட்டால் தீர்ந்தது கதை.
7. ஆஸ்திரேலிய மட்டையாளர்களில் மூன்றாவதாக இறங்குபவரும் நடுமத்தியினரும் வியப்புக்குள்ளாக்குபவர்கள். களமிறங்கியவுடனே அவர்களை முற்றுகையிட்டு முடக்கவேண்டும். கிளப்பத் தொடங்கிவிட்டார்கள் புழுதி அடங்குவதற்கு நெடு நேரமாகும்.
8. அவர்களுக்குப் பீதியூட்டும் பந்துவீச்சு எப்போதும் சுழற்பந்துகள்தாம். என்னதான் தெனாவட்டாக நிற்பதுபோல் தெரிந்தாலும் பயல்பிள்ளைகள் நடுக்குருத்தில் நடுக்குற்றவர்கள்தாம். சுழலுக்கு அவர்கள் மிரளாவிடில் முயற்சிகள் யாவும் விழலுக்கு நீரிறைத்ததாகிவிடும்.
9. பிடிதவறினாலோ ஓடுபலியாக்கும் வாய்ப்பை இழந்தாலோ அவர்களுக்கு வழிவிட்டதாகிவிடும். அவர்களுடைய அணித் தலைவன் நம்மாள் அளவுக்கு இல்லை என்பது நமக்கான நற்பேறு. ஆட்டம் அவர்களுடைய ஊரில் நடப்பது அவர்களுக்கான தோது.
10. இவை எல்லாவற்றையும்விட முக்கியமான மூடநம்பிக்கைக் கணக்கு ஒன்று அவர்களுக்குச் சாய்வாக இருக்கிறது. ஆட்டம் நடக்கின்ற நாள் வியாழக்கிழமை. வியாழன் என்றால் குரு. வியாழனின் நிறம் மஞ்சள். அவர்கள் மஞ்சளணிந்து விளையாடவிருக்கிறார்கள். இதுபோன்ற கடினமான ஆட்டங்களில் மாயக் கரத்தின் அருள்தான் முடிவைத் தீர்மானிக்கும். அதனால் நம்மவர்கள் முழுத்திறன்களோடு முயலவேண்டும். மஞ்சளில் ஒட்டியிருக்கும் பச்சை நம்மைக் காப்பாற்றாமலா போய்விடும் ?
குறிப்பு: கவிஞர் மகுடேஸ்வரனின் இந்த கட்டுரையைத் தர முக்கிய காரணம், கிரிக்கெட் ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆங்கிலப் பதங்களுக்கு அவர் தந்துள்ள தமிழ்ச் சொற்கள். இதனை தமிழ் கிரிக்கெட் அகராதி என்று தனியாகவே போடும் அளவுக்கு நிறையத் தந்துள்ளார். அதுபற்றி தனிக் கட்டுரையே தரவிருக்கிறோம்.