பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டத்தில் மைதானத்தில் நடைபெறும் சம்பவங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகின்றன.
அண்மையில் அகமதாபாத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் மத ரீதியான முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக icc யும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனை அடுத்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது. அப்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அமர்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி வந்தார்.
அப்போது அங்கு வந்த போலீசார் மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டும்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். இதனால் கடுப்பான அந்த ரசிகர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும் என அந்த ரசிகர் கேட்டார்.
அதற்கு போலீசார் இந்தியாவுக்கு ஆதரவாக எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம் ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்று கூறினார். இதற்கு அந்த ரசிகர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை எடுத்து போட்டி அமைப்பாளர்கள் அங்கிருந்து வந்து அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர்.
போலீசாரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ பாகிஸ்தானில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த முழக்கங்களை எழுப்பியது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரா இல்லை இந்தியாவை சேர்ந்தவரா என்ற விவரம் தெரியவில்லை.