இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா வைரஸ் 660 பேருக்கும் மேல் பரவி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் இரண்டு கட்டங்களை தாண்டி, மூன்றாவது கட்டமான சமூகப் பரவலை எட்டி விட்டதாக அஞ்சப்படுகிறது. அதன் காரணமாக மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடு
அடுத்த 21 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியே வரும் மக்களை எச்சரித்தும், லத்தி அடி கொடுத்தும் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கிரிக்கெட் ஆட்டம்
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு காலி இடத்தில் சிலர் கிரிக்கெட் ஆடி உள்ளனர். அவர்களை தடுக்க சில காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது கிரிக்கெட் ஆடியவர்கள் அவர்களை எதிர்த்துள்ளனர். வாக்குவாதம் செய்துள்ளனர்.
கன்னத்தில் அறை
பின்னர் ஒரு காவலருக்கு கன்னத்தில் அறை விழுந்துள்ளது. சிலர் காவலர்கள் மீது கல்லை வீசி கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, அங்கே கூடுதல் காவலர்களை அனுப்பி வைத்துள்ளார் அந்த பகுதி இன்ஸ்பெக்டர்.
கல் வீச்சு தாக்குதல்
ஆனால், அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் வீட்டு மாடிகளில் நின்று கொண்டு கற்களை வீசி காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில் நான்கு காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். நீண்ட நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நால்வர் கைது
பின்னர், அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள், காவலர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மதிக்காமல், காவலர்களை தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.