கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 3,50,000க்கும் மேற்பட்டோருக்கு பரவி உள்ளது. 14,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் நோய் பரவாமல் கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த இரு நாட்களில் 400க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
புதுவை பாதிப்பு
புதுவையில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அங்கே பல வெளிநாட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் உதவி செய்ய முன் வந்துள்ளது புதுச்சேரி கிரிக்கெட் அமைப்பு.
கிரண் பேடிக்கு கடிதம்
துதிப்பேட்டையில் உள்ள தங்கள் தங்குமிடத்தை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்க முன் வந்துள்ளது அந்த மாநில கிரிக்கெட் அமைப்பு. இது குறித்து புதுவை மாநில கவர்னர் கிரண் பேடிக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.
கிரிக்கெட் அமைப்பு கடிதம்
"நாங்கள் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளையும் நிறுத்தி விட்டோம். சுமார் 30 கொரோனா நோயாளிகள் வரை தங்கும் வசதி கொண்ட எங்கள் இடங்களை தேவை ஏற்பட்டால் லக்ஷ்மி மருத்துவ கல்லூரியுடன் இணைந்து வழங்குகிறோம்" என கூறி உள்ளது.