இந்தியா -ஆஸ்திரேலியா மோதல்
ஆஸ்திரேலியாவில் கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் குரூப் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. மழை காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வானது. நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
முதல் போட்டியில் வெற்றி
கடந்த 21ம் தேதி தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி. அந்த அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மட்டுமின்றி அடுத்ததாக நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இந்திய மகளிரின் ஆட்டங்கள் சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தன.
9 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
இந்நிலையில் இந்தியா சார்பில் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வரும் பௌலர் பூனம் யாதவ், தனது சிறப்பான பந்துவீச்சின்மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்த தொடரில் இந்தியா போட்டியிட்ட 4 போட்டிகளில் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பூனம்.
சக்ஸஸ் சீக்ரெட் சொல்லும் பூனம்
இந்நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் தன்னுடைய முதல் ஓவரின் 4வது பந்தில் எதிரணி வீராங்கனை அலிசா ஹீலி சிக்ஸ் அடித்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தன்னை நோக்கி தான் சிறந்த அனுபவமிக்க வீராங்கனை என்றும் தன்னிடம் இருந்து அணி அதிகமாக எதிர்பார்ப்பதாகவும் கூறியது தன்னை யோசிக்க வைத்தது என்றும் கூறியுள்ளார்.
திரும்பி பார்க்க நேரமில்லை
கேப்டன் தன்மீது வைத்திருந்த அந்த தன்னம்பிக்கை தனக்குள் மேலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியதாகவும், அடுத்த பந்திலேயே தான் விக்கெட்டை வீழ்த்தியதாகவும், அதையடுத்து திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் அணியின் வெற்றிக்காக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பலவீனங்களை அறிந்துள்ளேன்
இதனிடையே மெல்போர்னில் நாளை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியை தான் சிறப்பாக எதிர்கொள்வேன் என்றும், ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் முந்தைய போட்டிகளை பார்த்து அவர்களின் பலவீனங்களை தற்போது அறிந்து வைத்துள்ளதாகவும், அதற்கேற்ப நாளை நடைபெறவுள்ள போட்டியில் செயல்பட்டு கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு கைகொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.