மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டுகாலம் விளையாடி 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கும் நட்சத்திர வீரர் டெண்டுல்கருக்கு நடத்தப்படும் வழியனுப்பு விழாவின் போது சிறப்பு தபால் தலை, தங்க நாணயம் வெளியிடப்பட இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி டெண்டுல்கர் விடை பெறுகிறார். இப் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

ஓய்வு பெரும் தெண்டுல்கருக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா நடத்த மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இறுதிப் போட்டியின் போது தங்க நாணயத்தில் டாஸ் போடவும், அந்த நாணயத்தில் சச்சின் டெண்டுல்கரின் படத்தை பொறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் டெண்டுல்கர் படத்துடன் கூடிய சிறப்பு தபால்தலையும் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு டெண்டுல்கர் படம் பொறிக்கப்பட்ட தொப்பி, முகமூடி அளிக்கப்படுகிறது.
இதை இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து மும்பை கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தெண்டுல்கர் 199-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒரு அடி உயரமுள்ள வெள்ளியிலான மரம் நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. அதில் 199 வெள்ளி இலைகள் பொருத்தப்பட இருக்கிறது.