சிறுசோ பெருசோ.. உதவுறாங்களே.. அதை மட்டும் பாருங்கப்பா.. ஏன் இப்படி.. கொந்தளிக்கும் பிரக்யான் ஓஜா
டெல்லி: கொரோனாவைரஸ் நிவாரண நிதிக்கு உதவி செய்வோர் வழங்கும் நிதியைக் கூட விமர்சனம் செய்கிறீர்களே.. இது சரியா என்று கேட்டுள்ளார் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா.
Recommended Video
கொரோனாவைரஸ் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக நாட்டு மக்களிடம் பிரதமர் நநேந்திர மோடி நிதியுதவி கேட்டுள்ளார். பெரிய பெரிய தொழிலதிபர்களும் கூட உதவி செய்து வருகின்றனர். அதேபோல விளையாட்டுத்துறையினரும் கூட நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பிரக்யான் ஓஜா இப்படி ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். நிதியுதவி கொடுப்போரின் மனசைப் பாருங்க. அவர்கள் கொடுக்கும் தொகையைக் கூட சிலர் விமர்சிக்கின்றனர் என்று வருத்தப்பட்டுள்ளார்.

பிரக்யான் ஓஜா வருத்தம்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து: உதவிகளை அதன் அளவைக் கொண்டு பார்க்கக் கூடாது. எவ்வளவு கொடுத்தால் என்ன, சிறிய தொகையோ, பெரிய தொகையோ.. உதவி ஒன்றுதானே. அதைத்தான் நாம் பார்க்க வேண்டும். மாறாக உதவித் தொகையை அறிவிப்போரை சிலர் கேள்வி கேட்பது, விமர்சிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

விமர்சனம் வினோதமாக இருக்கிறது
இப்படிப்பட்டோரைப் பார்த்தால் வினோதமாக இருக்கிறது. உதவியை எப்போதும் தொகையை வைத்து அளவிடாதீர்கள். அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஓஜா. ஓஜா கடந்த மாதம்தான் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் என்பது நினைவிருக்கலாம். முன்னதாக இந்திய கிரிக்கெட் சங்கம் ரூ. 51 கோடி நிதியுதவியை அளித்துள்ளது.

குவிந்து வரும் நிதியுதவிகள்
அதேபோல கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தங்களது நிதியுதவியை அறிவித்துள்ளனர். பிரதமர் மோடி அறிவித்த நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதேபோல பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

தலா ரூ. 50 லட்சம் உதவி
அதேபோல முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ. 10 லட்சம் உதவியளித்துள்ளார். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறு மாத சம்பளத்தை ஹரியானா முதல்வர் நிவாரண நிதிக்கு அறிவித்துள்ளார். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் ரூ. 52 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.. கெளதம் கம்பீர் ரூ. 50 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications