சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
இந்தியாவிற்காக 24 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள ஸ்பின்னர் பிரக்யன் ஓஜா, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். இவர் பெரும்பாலும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின்கீழ் விளையாடியுள்ளார்.
தோனி குறித்து பாராட்டு
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடவுள்ளார். இதற்கென அவர் வரும் 2ம் தேதிமுதல் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி, பௌலர்களின் கேப்டன் என்று ஓஜா புகழ்ந்துள்ளார்.
ஓஜா கருத்து
தன்னை புரிந்துக்கொள்ளக்கூடிய கேப்டன் ஒவ்வொரு பௌலருக்கும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஓஜா, அவர் பௌலர்களுக்கு அளிக்கக்கூடிய ஆதரவு காரணமாகவே அவருடன் பணிபுரிந்த அனைத்து பௌலர்களும் அவரை புகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். நெருக்கடியான போட்டிகளில் பீல்டிங்கை சரியாக அமைத்து தருவது, பௌலர்களின் மனதை தெளிவாக வைத்துக் கொள்வது போன்ற உதவிகளை அவர் பௌலர்களுக்கு செய்து தருவார் என்றும் ஓஜா கூறியுள்ளார்.
சச்சினின் பேர்வெல் டெஸ்ட்
கடந்த 2013ல் வான்கடே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கரின் இறுதி டெஸ்ட் போட்டியான இதில் மேன் ஆப் த மேட்ச் பட்டத்தை வென்ற ஓஜா, கடந்த 2018ல் பீகார் அணிக்காக விளையாடினார். இதுவே இவரது இறுதிப்போட்டி.