இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அடுத்தடுத்த பந்துகளில் ஷார்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் பும்ராவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். இதனையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்களும், சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்களும், கேப்டன் கேஎல் ராகுல் 38 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியின் இன்னிங்ஸில் மொத்தமாக 31 பவுண்டரி, 18 சிக்சர்களும் விளாசப்பட்டது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளாசிய அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.
இதன்பின் 400 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர் - மேத்யூ ஷார்ட் கூட்டணி களமிறங்கியது. இதையடுத்து முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் ஷார்ட் 2 பவுண்டரிகள் உட்பட 9 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இரண்டாவது ஓவரை வீச பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டார். அப்போது ஸ்லிப் திசையில் சுப்மன் கில் ஃபீல்ட் மாற்றப்பட்டார்.
இதன்பின் பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது பந்தில் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் தேர்ட் மேன் திசையில் அஸ்வினின் அசத்தலான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியதால், ஆட்டம் பரபரப்பானது. ஆனால் பிரசித் கிருஷ்ணா வீசிய லெந்தில் பாலில் ஸ்டீவ் ஸ்மித் ஸ்லிப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்த பந்துகளில் இரு முக்கிய வீரர்களை வீழ்த்தி பிரசித் கிருஷ்ணா தரமான சம்பவத்தை செய்தார்.
இதனால் உலகக்கோப்பை தொடருக்கு பிரசித் கிருஷ்ணாவை பேக் அப் வீரராக கொண்டு செல்லலாம் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஏனென்றால் நல்ல உயரம் கொண்டுள்ள பிரசித் கிருஷ்ணா பவுன்சர், ஒய்டு யார்க்கர், வேகம் என்று தனது பந்துவீச்சில் ஏராளமான வித்தைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.