லீட்ஸ்: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே படுமோசமான பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் அவர் 20 ஓவர்கள் பந்துவீசி 128 ரன்களை வாரி இறைத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது சாதகமான விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், அவர் ஒரு ஓவருக்கு 6.4 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை வாரி இறைத்தது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
இங்கிலாந்து அணி விரைவாக ரன் சேர்த்ததற்கு பிரசித் கிருஷ்ணா முக்கிய காரணமாக அமைந்தார். தற்போதைய இந்திய அணியில் பும்ரா மற்றும் முகமது சிராஜுக்கு அடுத்து மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் விகிதத்தை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறார் பிரசித் கிருஷ்ணா. இதற்கு முன் 2014ஆம் ஆண்டு வருண் ஆரோன் ஒரு ஓவருக்கு 5.91 என்ற ரன் விகிதத்தில் விட்டுக்கொடுத்திருந்தார்.
அதற்குப் பிறகு தற்போது பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 6.4 ரன்கள் என்ற ரன் விகிதத்தில் விட்டுக்கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது மோசமான சாதனையால் ஏற்பட்ட பின்னடைவை நீக்கிக்கொள்ள மறு வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கடைசி நாளில் இங்கிலாந்தின் பத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸ் மோசமாக சென்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாக பந்துவீசி 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
அப்படி செய்தால், முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட மோசமான விமர்சனத்தை அவர் துடைத்து எறியலாம். மேலும், இதற்கு அடுத்த போட்டிகளில் அவருக்கான வாய்ப்பையும் தக்கவைக்கலாம். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தின் பத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உள்ளது. மிகவும் சவாலான ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா, பும்ரா மற்றும் சிராஜுக்கு ஒத்துழைத்து சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.