புனே: ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தகுதி பெறாதது குறித்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
நேற்று இரவு புனேயில் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதியது. இந்த ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பஞ்சாபுக்கு கிடைத்திருக்கும். ஆனால், பரிதாபமாக தோல்வியடைந்தது.
சீசனின் துவக்கத்தில் அதிரடியாக விளையாடி வந்த பஞ்சாப் அணி, சாம்பியனாகும் வாய்ப்பை பெறும் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. முதல் 6 ஆட்டங்களில் 5ல் பஞ்சாப் வென்றது. கடைசி 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றது. புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து வெளியேறியது.
Preity Zinta : "I'm just very happy that Mumbai is knocked out...very happy" ...🤣🤣#cskvkxip #KXIP #MumbaiIndians pic.twitter.com/jCKywZ4vep
— LinksInd (@LinksInd1) May 20, 2018
மிகவும் பரபரப்பாக துவங்கிய நேற்றைய ஆட்டத்தின்போது, அணி நிர்வாகி ஒருவரிடம் பிரீத்தி ஜிந்தா பேசும் ஒரு காட்சி டுவிட்டரில் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை தகுதி பெறாதது மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரீத்தி ஜிந்தா சொல்வது அவருடைய உதட்டசைவில் இருந்து தெரிகிறது.
காரணம் இதற்கு முந்தைய ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால், பிளே ஆப் வாய்ப்பு பஞ்சாபுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.
அதனால் தான், பஞ்சாப் அணிக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், மும்பைக்கு வாய்ப்பு கிடைக்காதது அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கக் கூடும்.