"6.5 அடி உயரம், 145 கிமீ வேகம்.. உலகக் கோப்பைக்கு இந்த பவுலரை தயார் செய்யுங்க”.. ஆகாஷ் சோப்ரா பேச்சு
மும்பை: இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து களமிறக்க வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு அவரை தயார் செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த 6 அடி 5 அங்குல உயரமுடைய குர்னூர் பிரார், மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் அசாத்திய திறமை கொண்டவர். அவரது உயரமும் ஆடுகளத்தில் இருந்து அவர் உருவாக்கும் கூடுதல் பவுன்ஸும் எதிரணி பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. கடந்த 2024-25 உள்நாட்டு சீசனில் 7 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இவர், பீகார் அணிக்கு எதிராக வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்திய ஒருநாள் அணியில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான குர்னூர் பிரார், இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த போதிலும், விளையாடும் லெவனில் அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "டெஸ்ட் போட்டிகள் சில மாத இடைவெளியில் மட்டுமே நடைபெறுகின்றன. எனவே குர்னூரை சிவப்புப்பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும். 2027 அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுக்கு நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் தரும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் அவசியமாகும். இப்போது இருந்தே பல்வேறு சூழ்நிலைகளில் அவரைப் பரிசோதித்தால் மட்டுமே உலகக் கோப்பை தொடங்கும் போது அவர் முழுமையாக தயாராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியில் பல வேகப் பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் குர்னூர் பிராருக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பது கடினமே.


Click it and Unblock the Notifications

