டெல்லி: உலகக் கோப்பை 2015-ல் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 5 வது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதியது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இது ஓரளவு நல்ல ஸ்கோரும்கூட.
இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை அபாரமாக வீழ்த்தியது.
இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. காலிறுதிக்கும் தகுதி பெற்றுள்ள இந்தியா, பி பிரிவில் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், " அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக கோப்பை 2015-ல் 5 வது தொடர் வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில், "அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்.இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். இதே உத்வேகத்தை தக்க வைத்துக்கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் என்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இல்லாத அளவுக்கு மிகுந்த நம்பிக்கையும் உறுதியும் மிக்க அணியாகத் திகழ்கிறந்து டோணி தலைமையிலான இந்திய அணி என சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.