புவனேஸ்வர்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் பெற்ற தோல்விக்கு இந்தியா பழிவாங்குமா, அல்லது போட்டியில் வென்று டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.
தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது டி20 விளையாட்டுப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளிடையேயான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டி நடக்கும் கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாக் நகரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அங்கு மேலும் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.