அது ஒன்னுதாங்க பெரிய கவலையா இருக்கு...!
மொஹாலி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நாளைய மொஹாலி 3வது ஒரு நாள் போட்டியில் நமது பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதுதான் இந்திய அணியின் பெரிய கவலையாக உள்ளதாம்.
முதல் இரு போட்டிகளிலும் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை. குறிப்பாக 2வது போட்டியில் நமது பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் நையப்புடைத்து விட்டனர்.
ஏதோ விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் புண்ணியத்தால் நாம் 2வது போட்டியை வெல்ல முடிந்தது. எனவே மொஹாலி போட்டியில் நமது பந்து வீச்சு பெரும் எதிர்பார்ப்பையும், செயல்பட்டாக வேண்டும் என்ற நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெம்புடன் களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள்
2வது போட்டியில் அபார வெற்றி பெற்றதால் இந்திய அணி தெம்புடன் உள்ளது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நிறைய நம்பிக்கையுடன் மொஹாலி களம் காண்கின்றனர்.

அதை விட பெட்டரா...
எனவே மொஹாலியில் நாளை நடைபெறும் 3வது ஒரு நாள் போட்டியில் இதை விட சிறந்த வெற்றியைப் பெறும் உத்வேகத்தில் இந்திய அணி உள்ளதாம்.

நல்ல பார்மில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவைக் குறை சொல்ல முடியாது. நல்ல பார்மில்தான் உள்ளனர். குறிப்பாக அவர்களது பேட்ஸ்மேன்கள். முதல் போட்டியிலும் சரி, 2வது போட்டியிலும் சரி பிரமாதமாகவே ஆடினர். ஆனால் ஜெய்ப்பூரில் அவர்களுக்கு நேரம் சரியில்லை. பந்து வீச்சு கை கொடுக்காமல் போய் விட்டது. எனவேதான் தோற்றனர்.

எப்படிப் போட்டாலும் அடிப்போம்யா...
மறுபக்கம் இந்திய அணி ஜெய்ப்பூரில் செயல்பட்ட விதம், ஆஸ்திரேலியா எப்படி ஆடினாலும் அதை சமாளிக்கும் திறன் தனக்கு உள்ளதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

மும்முனைத் தாக்குதல்
ஜெய்ப்பூரில் ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி என்று மும்முனைத் தாக்குதலை ஆஸ்திரேலியா எதிர்கொண்டு சமாளிக்க முடியாமல் சவலைப் பிள்ளைப் போல துவண்டு சுருண்டு போனது.

பேட்டிங் டாப்புதான்...
இந்தியாவின் பேட்டிங் வரிசையை ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லியும் பாராட்டியுள்ளார். இந்தியாவின் முதல் 7 வீரர்களும் அருமையானவர்கள், ஒரு நாள் போட்டிக்குப் பொருத்தமானவர்கள் என்று அவர் பாராட்டியுள்ளார்.

ஆனால் பவுலிங்...
ஆனால் இந்திய பவுலிங்தான் கவலை தருவதாக உள்ளது. இதில் மொஹாலி பிட்ச் வேறு பேட்டிங்குக்குச் சாதகமானது என்று தகவல் வெளியாகி அதுகுறித்து ஏற்கனவே ஒரு பல பக்க செய்தி வேறு போட்டுள்ளோம்.. இதுதான் இந்திய கேப்டனுக்கும் பெரும் கவலையாக உள்ளதாம்.

120 ஓவர்களுக்கு 864 ரன்...
நடப்புத் தொடரின் முதல் இரு போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி போட்டியில் மொத்தமாக சேர்த்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் 120 ஓவர்களை வீசி 864 ரன்களை வாரிக் கொடுத்துள்ளனர். அதாவது ஓவருக்கு 7.30 ரன்கள் கொடுத்துள்ளனர் புண்ணியவான்கள்.

வினய்குமார் - சர்மாவுக்கு வார்னிங்
தங்களுக்கு அணியில் கிடைத்துள்ள இடத்தை சொகுசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இஷாந்த் சர்மாவுக்கும், வினய் குமாருக்கும் நிச்சயம் டோணி வார்னிங் கொடுத்திருப்பார் என்று நம்பலாம். இருவரும் நிறைய ரன்ளை வாரிக் கொடுத்த வள்ளல்களாக வலம் வருகிறார்கள்.

இவங்களும் நல்லா விளையாடனும்
அதேசமயம், சுரேஷ் ரெய்னா, டோணி, யுவராஜ் சிங் ஆகியோரும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நாம் நம்புவோம்..
பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவிடம் பிரச்சினை இல்லை. ஆனால் பந்து வீச்சுதான் பயமுறுத்துகிறது. அதை மட்டும் சரி செய்து விட்டால்.. ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சங்காக ஊதி விடலாம்..


Click it and Unblock the Notifications