
டி20 தொடர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2வது போட்டியில் இந்தியாவும் வென்றன.

வாழ்வா, சாவா
தொடரின், 4வது போட்டி சென்னையில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு. அல்லது, ஒருநாள் தொடரையும் டோணி இழக்க வேண்டி வரும்.

தவான் மோசம்
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 போட்டிகளில், 218 ரன்களை குவித்து, முதலிடத்திலுள்ளார். ஆனால் சக தொடக்க ஆட்டக்காரரான தவான், 3 போட்டிகளில் வெறும் 59 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இத்தனைக்கும், முன்னதாக அவர் ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் விளாசி சிறந்த ஃபார்மில் இருந்தவர்தான் தவான்.

3வது இடத்துக்கு அடிதடி
இந்திய அணியின் 3வது இடம் கிட்டத்தட்ட ஏலம்விடப்படும் நிலையிலுள்ளது. 3வது இடத்தில் இறங்கிதான் அடுத்தடுத்து இரு அரை சதங்கள் விளாசினார் ரஹானே. கீழ்வரிசையில் இறக்கப்பட்ட கடைசி போட்டியில் சொற்ப ரன்னில் வெளியேறினார். ஆனால் இம்முறை 3வது இடத்தில் இறங்கிய கோஹ்லி வெகுநாளைக்கு பிறகு அரை சதம் அடித்தார். எனவே நாளைய போட்டியில் யாரை 3வது இறக்குவது என்பதில் டோணி குழம்பியுள்ளார்.

கடைசியில் கைகொடுப்பது யார்?
டோணிக்கு வயதாகிவிட்டதால், கடைசி நேரத்தில் களமிறங்கி பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் தவிக்கிறார். எனவே 4வது இடத்தில் இறங்க முயற்சிக்கிறார். 3 போட்டிகளில் 173 ரன்கள் குவித்து, டோணி தாக்குப்பிடித்துள்ளார். ஆனால் டோணி மேலே வந்தால் கீழ் வரிசையில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் போய்விடுகிறது. எனவே டோணியே அதையும் செய்யும் நிலை உருவாகிறது. ரெய்னா மோசமான ஃபார்மில் உள்ளது கீழ்வரிசை அதிரடியை கேள்விக்குறியாக்குகிறது.

சென்னையில் ரெய்னா
ரெய்னா கடந்த 3 போட்டிகளில் சேகரித்த ரன்கள் 3. சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிய ரெய்னாவுக்கு சென்னை பிட்ச் கைகொடுத்து அவரின் அதிரடியை மீட்டு தரும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதுபோன்ற நிலையால்தான், இந்திய பேட்டிங் வரிசை, நெகிழ்ச்சிக்கு ஒத்துழைக்க மறுத்து, அவரவர் இடங்களில் ஆடுவதையே விரும்புகிறது என்று டோணி ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

டுமினிக்கு காயம்
தென் ஆப்பிரிக்காவை பொறுத்தளவில், அதிரடி வீரர் டுமினி காயம் காரணமாக 3 வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டீன் எல்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டிவில்லியர்ஸ் மற்றும் டுப்ளசிஸ் சிறப்பாக ஆடிவருகிறார்கள். தொடக்க வீரர் டி காக் மீண்டும் ஃபார்முக்கு வந்து சதம் அடித்துள்ளார். ஆம்லா மட்டுமே அவர்களுக்கு தலைவலி. 3 போட்டிகளில், 59 ரன்கள்தான் அவர் எடுத்துள்ளார்.

எங்கே, எப்போது?
போட்டி, சென்னை, சேப்பாக்கத்திலுள்ள, சிதம்பரம் மைதானத்தில், நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்கி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும், தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Click it and Unblock the Notifications