சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ள நிலையில் இதிலாவது வெற்றி பெற்று ஒய்ட்வாஷ் அசிங்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் டோணி அணி உள்ளது.
கான்பெராவில் நடந்த 4வது ஆட்டத்தில் வெற்றி பெற இருந்த வாய்ப்பை இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் வீணடித்து விட்டனர். எனவே, குர்கெரத்சிங், ரிஷிதவான் ஆகிய புதுமுக வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொள்ளவில்லை. இருவரும் நாளைய ஆட்டத்தில் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

பேட்டிங்கில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகர்தவான், ரஹானே ஆகிய நால்வர் மட்டுமே சோபித்து வருகிறார்கள். ஆனால், ரஹானே காயம் அடைந்து இருப்பதால் நாளை ஆடுவது உறுதியாக தெரியவில்லை. அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
4 ஆட்டத்திலும் வென்ற ஆஸ்திரேலியா இந்தப் போட்டியிலும் வென்று 5-0 என்ற கணக்கில் இந்தியாவை, ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது.
2014 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு, ஆஸ்திரேலியா, இதுவரை சொந்த மண்ணில் வீழ்ந்தது இல்லை. நாளைய ஆட்டம் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது.