
சோதனை ஆட்டம்
உண்மையில் 5வது டெஸ்ட் போட்டி இந்திய வீரர்களுக்கு பெரும் சோதனையான போட்டிதான். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் அவர்கள் நிரூபித்தாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

நி்ரூபிப்பார்களா
கடந்த இரு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மிக மோசமாக ஆடி விட்டனர். பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி சொதப்பி விட்டனர்.

சொதப்பும் வீரர்கள்
இந்திய அணியின் இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்புகின்றனர். முதல் இரு போட்டிகளில் மட்டும் அசத்திய பலர் அதன் பின்னர் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. குறிப்பாக விராத் கோஹ்லி.

கூவாத கோஹ்லி
துணை கேப்டன் விராத் கோஹ்லி இதுவரை ஒரு போட்டியில் கூட அசத்தவில்லை. மாறாக முட்டையும் போண்டாவுமாக இருக்கிறது அவரது ஆட்டம். ஒரு இன்னிங்ஸில் கூட அவர் அதிரடியைக் காட்டவில்லை. பவுலிங்கிலும் நம்மவர்கள் சொதப்புகிறார்கள்.

குழப்பமான பவுலிங்
அதேபோல பந்து வீச்சிலும் நம்மவர்கள் ஒரு தெளிவில் இல்லை. ஆணித்தரமான பந்து வீச்சை காட்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ரன் எடுக்க விட்டு விடுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக டோணிக்கு.

மண்டை காய்ந்திருக்கும் டோணி
கேப்டன் டோணிதான் மண்டை காய்ந்து கிடக்கிறார். இங்கிலாந்தை எப்படி அமுக்குவது என்று அவருக்குப் பிடிபடவில்லை. எப்படி செய்தாலும் அதை சமாளித்து விடுகிறார்களே என்று டென்ஷனாக இருக்கிறார் டோணி. 2வது போட்டியில் கை கொடுத்த இஷாந்த் சர்மாவைத்தான் இப்போதைய போட்டியில் இந்தியா நம்பியுள்ளது.

கை கொடுப்பாரா இஷாந்த்
2வது டெஸ்ட் போட்டியில் மயிர்க்கூச்செறிய வைத்தார் இஷாந்த் சர்மா. ஆனால் அதன் பின்னர் 3 மற்றும 4வது போட்டிகளில் அவர் ஆடவில்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி பார்மாகி விட்டார்.

மொயீன் மிரட்டல்
கடந்த இரு போட்டிகளிலும் மொயீன் அலியின் மிரட்டல் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக 4வது போட்டியில் பின்னி விட்டார் மொயீன். இது இந்தியாவை திணறடித்து விட்டது. இவரை சமாளிக்க அஸ்வினை வைத்தும் நம்வர்களால் சமாளிக்க முடியவில்லை.

பேட்டிங்கில் மட்டும் அஸ்வின்
அஸ்வின் பேட்டிங்கில் மட்டுமே ஜொலித்துள்ளார். 4வது போட்டியில் அவர் கடைசி வரிசையில் சற்று ஆடி கொஞ்சமாவது மானத்தைக் காப்பாற்றினார். ஆனால் பவுலிங்கில் ஜொலிக்கவில்லை. அதேபோலத்தான் ஜடேஜாவும்.

ஜடேஜாவை நீக்கி விடுவார்களா
ஜடேஜா பெரிய அளவில் பாதிப்பைத் தராமல் இருக்கிறார். எனவே அவருக்கும், அவரைப் போல சொதப்பி வரும் சிலருக்கும் ஓய்வு கொடுத்து புதியவர்களுக்கு வாய்ப்பு தருமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கம்பீருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

கலக்காத கம்பீர்
கம்பீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அவரது பார்ம் திருப்திகரமாக இல்லை. அதேசமயம் பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

பங்கஜ் சிங் போகலாம்..
பங்கஜ் சிங் நன்றாகத்தான் பந்து வீசுகிறார். ஆனால் விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறார். தற்போது இஷாந்த் சர்மா திரும்பி வருவதால் பங்கஜ் சிங் ஓய்வு தரப்படலாம் என்று தெரிகிறது. இருப்பினும் வரும் ஆரோன் இடம் பெறலாம்.

வசீகரித்த வருண் ஆரோன்
வருண் ஆரோன் போன டெஸ்ட் போட்டியில் பரவாயில்லை ரகமாக விளையாடினார். குறிப்பாக பவுன்சர்களை நன்றாகவே வீசினார். எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். பந்து வீச்சைப் பொறுத்தவரை 5 பவுலர்கள் என்ற கொள்கையை டோணி விட மாட்டார் என்றே தெரிகிறது.

மாறாத உத்தியுடன் டோணி
3 வேகப் பந்து வீச்சாளர்களையும், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் வைத்தே இந்தப் போட்டியையும் இந்தியா சந்திக்கும் என்று தெரிகிறது. கூடுதலாக ஒரு வேகப் பந்து வீச்சாளரை இந்தியா தேர்வு செய்யாது என்றும் நம்பப்படுகிறது. இந்தப் போட்டியின்போது டோணிக்கு ஒரு சந்தோஷ நிகழ்வு நடக்கும்.

டோணியின் புதிய சாதனை
இந்த டெஸ்ட் போட்டியில் டோணி ஆடும்போது புதிய சாதனை படைப்பார். அதாவது, 28 வெளிநாட்டு போட்டிகளுக்கு தலைமை தாங்கிய 2வது இந்திய கேப்டனாக அவர் உருவெடுப்பார். ஏற்கனவே கங்குலியும் இதே அளவிலான போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவரை தற்போது டோணி சமன் செய்யவுள்ளார். இருப்பினும் இந்த வகையில் கங்குலி கையே ஓங்கியுள்ளது.

கங்குலி பரவாயில்லையே
அதேசமயம், இந்த 28 போட்டிகளில் கங்குலி 11ல் வெற்றி பெற்றுள்ளார். 10ல் தோற்றுள்ளர். மற்றவை டிரா ஆகின. ஆனால் டோணியிடம் 6 வெற்றிகள், 8 டிரா, 13 தோல்விகள் உள்ளன.

வென்றால்தான் தப்பலாம்
இந்தப் போட்டியில் வென்றால்தான் இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். மாறாக தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை இங்கிலாந்து வென்று விடும்.


Click it and Unblock the Notifications