பஞ்சாப் அணியை வீழ்த்தி ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் முதல் வெற்றி !
மொஹாலி: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இதுவரை வலம் வந்த சுரேஷ் ரெய்னா, குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் இந்த சீசனில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இதுவரை வலம் வந்த சுரேஷ் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் 34 பந்துகளில் 42 ரன்களும், வோரா 23 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இவர்கள் இருவரும் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 2 ரன்களிலும், கேப்டன் மில்லர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சகா 20 ரன்களும், ஸ்டாய்னிஸ் 33 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது.
குஜராத் தரப்பில் பிராவோ 4 விக்கெட்டுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
ஆரோன் பின்ச், மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெக்கல்லம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பின்ச்சுடன், கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய ரெய்னா 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி ஆட்டமிழந்தார். அப்போது குஜராத் லயன்ஸ் அணி 5.3 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பின்சுடன், தினேஷ் கார்த்திக் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 47 பந்துகளில் 74 ரன்கள் குவித்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து, குஜராத் லயன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. தினேஷ் கார்த்திக் இறுதி வரை அவுட் ஆகாமல் வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றார். அவர் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசிய ஆரோன் பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கேப்டன் டோணியின் நம்பகமான தளபதியாக விளங்கி வந்த ரெய்னா தற்போது தனித்து களம் இறங்கி முதல் போட்டியிலே வெற்றியும் பெற்றுள்ளார்.

புது கேப்டனுடன் பஞ்சாப்
பஞ்சாப் அணி புதிய கேப்டனுடன் களம் காண்டது. இதுவரை கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி நீக்கப்பட்டு விட்டார். புதிய கேப்டனாக டேவிட் மில்லர் களம் காண்கிறார்.

ஷேவாக் இல்லை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வீரேந்திர ஷேவாக் இல்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

உறுமிய குஜராத் லயன்ஸ்
குஜராத் லயன்ஸ் அட்டகாசமான பேட்டிங் ஆர்டருடன் களம் இறங்கியது. ரெய்னா, மெக்கல்லம், ஆரோன் பின்ச், ஆல் ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா, பால்க்னர் ஆகியோர் அதிரடிக்கு உத்தரவாதமானவர்கள்.

ஆபத்பாந்தவன் பிராவோ
வேயன் பிராவோ ஆபத்பாந்தவனாக இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் கை கொடுக்கத் தவறாதவர் பிரோவோ. பந்து வீச்சு மட்டுமே குஜராத்துக்கு சற்று கவலைக்கிடமானது. டேல் ஸ்டெயின் மட்டுமே மெயின் பவுலராக உள்ளார்.

முரளி விஜய்
பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் தவிர ஷான் மார்ஷ், முரளி விஜய், மிட்சல் ஜான்சன் ஆகியோர் நம்பகமான வீரர்கள். மில்லர் கேப்டனாக நிறைந்த அனுபவம் உடையவர் அல்ல என்பது பின்னடைவுதான்.

ரெய்னா மீது அனைவரின் கண்களும்
ரெய்னா மீதுதான் அனைவரின் கண்களும் இருந்தன. முதல் முறையாக ஐபிஎல் அணி ஒன்றை வழிநடத்தி வெற்றியும் பெற்றார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் குவித்த சாதனையாளர். எந்தப் போட்டியிலும் விளையாடாமல் இருந்ததில்லை என பல பெருமைகளையும், சாதனைகளையும் வைத்திருப்பவர் ரெய்னா. டோணியின் பாதிப்பு ரெய்னாவிடமும் இருக்கும் என்பதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்து.


Click it and Unblock the Notifications