
குளறுபடிகள்
பிசிசிஐ-யில் நடந்த அதிகார மோதல்கள் மற்றும் ஐபிஎல் குளறுபடிகள் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்றி பிசிசிஐயை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

தேர்தலுக்கு அனுமதி
நிர்வாக கமிட்டி ஒன்றை அமைத்த உச்சநீதிமன்றம் படிப்படியாக விதிகளில் மாற்றங்களை அமல்படுத்தி வந்தது. அதன் முடிவாக தற்போது தேர்தல் நடத்தி பிசிசிஐ தானாக இயங்க அனுமதி அளித்துள்ளது.

முகத்தை மாற்ற வேண்டும்
இந்த நிலையில், பிசிசிஐ-யின் முகத்தை மாற்றவும், கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கத்தில் இருந்த பணிகளை விரைவாக முடிக்கவும் சரியான நபர் தேவைப்பட்டார். பிசிசிஐ-க்குள் இருக்கும் பெரும் அரசியலை சமாளித்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.

கங்குலி தலைவர்
அந்த நிலையில் தான் பல அதிகாரக் குழுக்களும், கங்குலியை தலைவராக ஒப்புக் கொண்டுள்ளன. அனைவரும் பேசி எடுத்த முடிவு என்பதால் கங்குலி தலைவர் பதவிக்கும், ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும், அருண் சிங் தமால் பொருளாளர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

65 ஆண்டுகளுக்குப் பின்..
அக்டோபர் 23 அன்று நடந்த பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் கங்குலிக்கு அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 65 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்த சாதனை நிகழ்ந்தது.

விஜயநகர மகாராஜா
1954ஆம் ஆண்டு விஜயநகர மகாராஜா பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்தார். அவர் கிரிக்கெட் வீரராகவும் இருந்தவர். அவர் தான் பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்த முதல் கிரிக்கெட் வீரர்.

இடைக்கால பிசிசிஐ தலைவர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ஷிவ்லால் யாதவ் ஆகியோர் இடைக்கால பிசிசிஐ தலைவராக இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அதிக அதிகாரம் கிடையாது. அவர்கள் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்களும் இல்லை.

கல்கத்தாவின் இளவரசர்
அந்த வகையில், விஜயநகர மகாராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்த முழுமையான இரண்டாவது கிரிக்கெட் வீரர் கல்கத்தாவின் இளவரசர் என அழைக்கப்படும் கங்குலி தான்.

பிசிசிஐ விதி சிக்கல்
பிசிசிஐ விதிப்படி ஒருவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் அமைப்புகளில் பதவிகளில் இருக்க முடியும். அதன் பின் சில ஆண்டுகள் எந்தப் பதவியிலும் அமரக் கூடாது.

பத்து மாதங்கள்
அதன்படி, ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்துவிட்ட கங்குலி, பத்து மாதங்கள் மட்டுமே பிசிசிஐ தலைவராக பதவி வகிக்க முடியும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கங்குலி பதவி விலக வேண்டும்.


Click it and Unblock the Notifications