சென்னை: பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் குறித்த டிவிட்டுகளை செய்தியாக்கிய தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று, பிலிப் ஹியூக்ஸ்சுக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரிண்ட் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளது.
பவுன்சர் பந்தால் தலையில் படுகாயத்துடன் போராடி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இன்று வெளியிட்டிருந்தது. அப்போது சச்சின் டெண்டுல்கரின் டிவிட்டை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் "பிலிப் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். கிரிக்கெட்டின் சோக நாள். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சச்சின் டெண்டுல்கரின் ஆன்மா சாந்தியடையட்டும் (RIP Sachin Tendulkar)" என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது பிலிப் ஹியூக்சின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று சச்சின் தனது டிவிட்டர் செய்தியின் கடைசி வரியில் கூறியதை, மாற்றி அவரது பெயரையே போட்டுவிட்டது நாளிதழ்.
இன்று காலை நாளிதழில் இந்த செய்தியை படித்த கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். டிவிட்டர் மூலம் தங்கள் கோபத்தை பத்திரிகைக்கு எதிராக காண்பித்து வருகின்றனர். டிவியில் போடப்படும் பிரேக்கிங் செய்தி, ஆன்லைன் செய்திகள் என்றால் நேரத்தின் அவசியம் கருதி வேகமாக தர வேண்டியிருக்கும். இதனால் தவறுகள் நிகழுவதும் சகஜம். அதை திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அச்சு ஊடகத்தில் ஒரு தவறு நடந்து விட்டால் அதை உடனடியாக திருத்த முடியாது. மறுநாள் மறுப்பு வெளியிட்டால்தான் உண்டு. எனவே முன்னணி நாளிதழின் இந்த தவற்றை சச்சின் ரசிகர்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தவறு என்று வர்ணித்து வலைத்தளங்களில் கருத்திட்டு வருகின்றனர்.