
கோச் டிராவிட்
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் 28ம் தேதி இலங்கை புறப்பட்டது. அங்கு தற்போது இந்திய அணி வீரர்கள் பயோ-பபுளில் உள்ளனர். இத்தொடர் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட மிக முக்கிய காரணம் "கோச்" ராகுல் டிராவிட். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

விதைத்த விதைகள்
இன்று இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து செதுக்கியவர் டிராவிட் தான். ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது.

பேசும் விதம்
இதனால், ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், இந்திய அணி விளையாட உள்ளதால், இத்தொடர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக, அவர் சில வியூகங்களை வகுத்து அணியை வழிநடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்து அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ப்ரித்வி ஷா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேட்டி அளித்துள்ளார். அதில், "ராகுல் டிராவிட் பேசும் விதம், அவர் தனது பயிற்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதம் ஆச்சரியமாக இருக்கும்... அவருக்கு கிரிக்கெட் பற்றி சகலமும் தெரியும். ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்ற சூழல் குறித்து விவாதிப்பதில், அதை எவ்வாறு திறம்பட சமாளிப்பது என்பதையும் அவரைவிட ஒருவர் சிறப்பாக சொல்லிவிட முடியாது.

டிராவிட் கண்டிஷன்
ராகுல் சார், எப்போதும் வீரர்களின் ஓய்வு அறையில் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பவர். வீரர்களை ஒழுக்கத்தை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்புடன் இருப்பவர். ராகுல் சாருடன் பயிற்சியில் ஈடுபடும் செஷன்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அவருடன் மணிக்கணக்கில் பேச விரும்புகிறேன். இந்த சுற்றுப்பயணத்தில், நான் எனது வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். டிராவிட் தற்போது நாட்டின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார்" என்று ப்ரித்வி ஷா கூறியுள்ளார்

பம்மிய வீரர்கள்
தற்போது குவாரன்டைனில் உள்ள இந்திய அணி வீரர்கள், சமீபத்தில் நீச்சல் குளத்தில் சிறிது நேரம் பொழுதை போக்கி மகிழ்ந்தனர். அதேசமயம், அணியின் ஆலோசனை கூட்டங்களில், சில இளம் மற்றும் சீனியர் வீரர்கள் சற்று மெத்தனமாக இருந்ததாக தெரிகிறது. முதலில் இதுகுறித்து, மௌனம் காத்த டிராவிட், பிறகு மெல்ல மெல்ல வீரர்களிடம் இதுகுறித்து அட்வைஸ் செய்த பிறகும், சில வீரர்கள் சற்று மெத்தனமாகவே இருக்க, பொரிந்து தள்ளிவிட்டார் ராகுல் டிராவிட் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











