மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் டி20 தொடரில், இந்திய அணியில் இருந்து நீண்ட காலமாக விலக்கப்பட்டிருந்த பிரித்வி ஷா, தனது மிரட்டலான ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ட்ரையம்ஃப் நைட்ஸ் அணிக்கு எதிராக, மும்பை பாந்தர்ஸ் அணிக்காக களமிறங்கிய பிரித்வி, தொடக்க ஆட்டக்காரராக விளையாடி ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன் மூலம், 34 பந்துகளில் 75 ரன்கள் குவித்த அவர், 12 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களைப் பதிவு செய்தார். சமீபத்தில் மும்பை அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட பிரித்வி ஷா, உடல் தகுதி இல்லாததாகவும், கிரிக்கெட் மீதான கவனம் குறைந்துவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டார்.

இதனால், பல முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி, மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால், ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை. காயம் காரணமாக வீரர்கள் விலகியபோதும், மாற்று வீரராகக் கூட அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.
இந்தச் சூழலில், மும்பை டி20 தொடரில் பிரித்வி ஷா தனது திறமையை நிரூபித்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். மும்பை பாந்தர்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அவர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவர் பிளேவை திறம்பட பயன்படுத்திய அவர், பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசி அசத்தினார்.
நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்களை குவித்தார். பின்னர், ஐந்தாவது ஓவரில் மினாட் மஞ்சுரேக்கர் வீசிய பந்துவீச்சில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்களை சேர்த்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், 34 பந்துகளில் 75 ரன்களை எடுத்து, 220 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டை பதிவு செய்தார்.
பிரித்வியின் இந்த மிரட்டலான ஆட்டத்துடன், ஹர்சல் ஜாதவ் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதனால், மும்பை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரையம்ஃப் நைட்ஸ் அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். பிரித்வி ஷாவின் இந்த அதிரடி ஆட்டம், அவரது திறமையை மீண்டும் நிரூபித்து, இந்திய கிரிக்கெட் அணியில் திரும்ப இடம் பிடிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.