மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, தற்போது இந்திய அணியிலும், ஐபிஎல் அணிகளிலும் தனது இடத்தை இழந்து, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் மும்பை கிரிக்கெட் அணியை விட்டு வெளியேறி, மற்றொரு மாநில அணிக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்வி ஷா அடுத்ததாக மகாராஷ்டிரா கிரிக்கெட் அணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். அவரது தலைமையில் பிரித்வி ஷா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட், சிறந்த வீரராக இருந்தாலும், இந்திய அணியில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் முத்திரை பதித்து வருகிறார்.
இந்நிலையில், வரவிருக்கும் ரஞ்சி ட்ராபி தொடரில் பிரித்வி ஷா மகாராஷ்டிரா அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், பிரித்வி ஷா பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். சிறுவயதில் இருந்தே மும்பை அணிக்காக அண்டர்-16, அண்டர்-19 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விளையாடி இருக்கிறார்.
கடைசியாக, சையது முஸ்தாக் அலி ட்ராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். ஆனால், விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை, மேலும் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். மும்பை அணிக்காக விளையாடும்போது, பிரித்வி ஷாவின் நடத்தை குறித்து புகார்கள் எழுந்தன. அவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், பார்ட்டிகளில் அதிகம் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனால், மும்பை அணியில் தனக்கு இனி போதிய வாய்ப்பு கிடைக்காது என உணர்ந்த பிரித்வி ஷா, மகாராஷ்டிரா அணிக்கு மாற முடிவு செய்துள்ளார். இந்த அணி மாற்றம் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு புதிய தொடக்கமாக அமையலாம் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
உதாரணமாக, கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், அந்த அணியை விட்டு வெளியேறி, 2022 முதல் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி ரஞ்சி ட்ராபியை வென்றதோடு, கருண் நாயருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தது.
இதேபோல, அணி மாற்றம் பிரித்வி ஷாவின் செயல்பாட்டையும் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் பிரித்வி ஷாவின் திறமையை மீண்டும் வெளிப்படுத்த உதவுமா என்பதை ரஞ்சி ட்ராபியில் அவரது ஆட்டம் தீர்மானிக்கும்.