மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா தனது புதிய காதலியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இன்ஸ்டாகிராம் பிரபலமான அக்ரிதி அகர்வாலுடன் நீண்ட நாட்களாக பிரித்வி ஷா பழகி வந்த நிலையில், ரசிகர்களிடையே அக்ரிதி அகர்வால் யார் என்ற தேடல் அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் என்று பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, தற்போது ஐபிஎல் தொடரில் கூட யாராலும் ஏலம் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அவரின் அடிப்படை விலையாக ரூ.75 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட போதும், பிரித்வி ஷாவை எந்த அணியும் வாங்கவில்லை. இதற்கு பிரித்வி ஷா ஒழுக்கமின்மையே காரணமாக விமர்சிக்கப்பட்டது.

அதேபோல் மும்பை அணியில் இருந்து விலக பிரித்வி ஷா முடிவு எடுத்த நிலையில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடி வரும் பிரித்வி ஷா, அண்மையில் சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். மகாராஷ்டிரா அணியில் இணைந்துள்ள பிரித்வி ஷா, இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்கவில்லை.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை தனது நீண்ட நாள் காதலியான அக்ரிதி அகர்வாலுடன் பிரித்வி ஷா கொண்டாடி இருக்கிறார். இதன் காரணமாக யார் இந்த அக்ரிதி அகர்வால் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். 2003ஆம் ஆண்டு பிறந்த அக்ரிதி அகர்வால், லக்னோ மாவட்டத்தில் பிறந்தவர். இதன்பின் உயர் கல்விக்காக மும்பைக்கு அவரின் குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது.
மும்பையில் உள்ள நிர்மலா மெமோரியல் கல்லூரியில் மேலாண்மை படிப்பில் டிகிரி பெற்ற அவர், கண்டெண்ட் கிரியேட்டராக பணியை தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கொரோனா பரவலின் போது டிக் டாக்கில் சில வீடியோக்களை இவர் பதிவிட தொடங்கி இருக்கிறார். அதன் மூலமாக பெரியளவில் அக்ரிதி அகர்வால் மீது வெளிச்சம் பாய்ந்துள்ளது.
இதன்பின் பிரித்வி ஷாவுடன் ஏற்பட்ட சந்திப்புக்கு பின் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் காதல் மலர, அதனை இன்ஸ்டாகிராம் கமெண்ட் மூலமாக சில நேரங்களில் வெளிப்படுத்தி வந்தனர். ஆனாலும் பொதுவெளியில் பிரித்வி ஷா இதுவரை அக்ரிதி அகர்வாலுடன் உறவில் இருப்பதை கூறவில்லை.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் விநாயகர் முன் தம்பதிகளை போல் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் பிரித்வி ஷா மற்றும் அக்ரிதி அகர்வால் இணைக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். விரைவில் பிரித்வி ஷா கிரிக்கெட் களத்தில் உச்சத்தை எட்டும் போதும், இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.