
அண்டர் 19 உலகக்கோப்பை
அண்டர் 19 அணியில் கேப்டனாக செயல்பட்டு 2018 அண்டர் 19 உலகக்கோப்பை வென்று கொடுத்தவர் ப்ரித்வி ஷா. மும்பை அணியில் ஆடி வந்த அவர் இளம் வயது முதலே சச்சினின் பார்வையில் இருந்து வந்தார். இயல்பிலேயே அவருக்கு பேட்டிங் திறன் இருந்தது.

அறிமுக டெஸ்ட் சதம்
நல்ல பயிற்சி மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட ப்ரித்வி ஷா, அண்டர் 19 அணி, மும்பை அணியில் ஆடி பின் இந்திய அணியிலும் இடம் பெற்றார். தன் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து இந்தியா முழுவதும் பிரபலமான வீரராக மாறினார்.

காயம்
ஆனாலும், அந்த முதல் போட்டிக்கு பின் அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கை அத்தனை சிறப்பாக அமையவில்லை. அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் காலில் காயம் ஏற்பட்டு விலகினார். காயத்தில் இருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.

ஊக்கமருந்து
அப்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதன் முடிவில் அவருக்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அதனால், அவரைப் பற்றி விமர்சனங்கள் எழத் துவங்கியது. அவர் களத்துக்கு வெளியே ஒழுக்கமாக இல்லை என சிலர் குற்றம் சாட்டி வந்தனர்.

சிறப்பான வீரர்
இந்த நிலையில், வாசிம் ஜாபர் ப்ரித்வி ஷா பற்றி கூறுகையில், அவர் சிறப்பான வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் அடிக்கும் ஷாட்களை போலவே அவர் தொடர்ந்து ஆடினால், அவர் வீரேந்தர் சேவாக் போல ஆகும் திறன் உள்ளது என் நினைக்கிறேன் என்றார்.

புரிந்து கொள்ள வேண்டும்
ஆனால், அதே சமயம் அவர் விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பின்னால் அமர்ந்து தன் விளையாட்டை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவர் இது குறித்து நியூசிலாந்தில் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். இரண்டு முறை ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார் என்று குறிப்பிட்டார் வாசிம் ஜாபர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
ப்ரித்வி ஷா நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடி, 4 இன்னிங்க்ஸ்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் மட்டுமே ஆறுதலாக இருந்தது. அவரது டெக்னிக்கை எளிதாக உடைத்து நியூசிலாந்து அவரை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுக்கமாக இருக்க வேண்டும்
ப்ரித்வி ஷா மீதான தடை சர்ச்சை உள்ளிட்டவற்றை பற்றி பேசிய ஜாபர், அவர் களத்துக்கு வெளியே தன் வாழ்க்கையை இன்னும் ஒழுக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் சர்வதேச அளவில் சாதிக்கும் ஆட்டத்தை வைத்துள்ளார். ஆனால், அவர் கிரிக்கெட்டுக்கு வெளியே நிறைய ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











