மும்பை: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் என்று பாராட்டப்பட்ட ப்ரித்வி ஷா, தனது கிரிக்கெட் பயணத்தில் பெரும் சரிவை சந்தித்தார். தற்போது தனது தவறுகளை உணர்ந்து ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த அவர், இனி மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்திய அணியின் மற்றொரு இளம் நட்சத்திர வீரரான சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் ப்ரித்வி ஷா விளையாட உள்ளார். இந்த திடீர் அணி மாற்றம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி உள்ளூர் அணியான மும்பை அணியை விட்டு ப்ரித்வி ஏன் விலகினார்? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

ப்ரித்வி ஷா, தனது சிறு வயதிலிருந்தே மும்பை அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். பள்ளி கிரிக்கெட்டில் 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது முதல், ரஞ்சி டிராபி, தியோதர் டிராபி என அனைத்திலும் மும்பை அணிக்காக தனது முத்திரையைப் பதித்தார். 17 வருடங்களாக மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் இருந்த தனது நீண்ட பந்தத்தை முறித்துக்கொண்டு, தற்போது மகாராஷ்டிரா அணிக்கு மாறியுள்ளார். இந்த முடிவுக்காக, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) அவர் பெற்றுள்ளார்.
மும்பை போன்ற ஒரு ஜாம்பவான் அணியிலிருந்து ப்ரித்வி ஷா வெளியேறியதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக, மும்பை அணியில் ப்ரித்வி ஷாவிற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் அவருக்கு சுமூகமான உறவு இல்லை என்றும், இதன் காரணமாகவே அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வேகத்திலேயே சதம் அடித்து அசத்திய ப்ரித்வி ஷா, அதன்பிறகு தனது ஃபார்மை இழந்து தவித்தார். அவரது ஃபிட்னஸ் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, ஒரு புதிய சூழலில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், ப்ரித்வி ஷாவை தங்கள் அணிக்காக விளையாட வருமாறு அழைப்பு விடுத்தது. ஒரு புதிய தொடக்கத்தைத் தேடிக்கொண்டிருந்த ப்ரித்வி ஷாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக, இந்திய அணியின் தொடக்க வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். தற்போது, ப்ரித்வி ஷாவும் அந்த அணியில் இணைந்துள்ளது, மகாராஷ்டிரா அணியின் பேட்டிங் வரிசையை பலமாக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், ப்ரித்வி ஷா தனது ஃபார்மை மீட்க வேண்டும்.