மும்பை: ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்தும் இளம் அதிரடி வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரித்வி ஷாவின் ஒழுங்கீன நடவடிக்கையும், ஃபிட்னஸ் பிரச்சனையும் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரித்வி ஷா. அந்த டெஸ்ட் தொடரிலேயே அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அவர், இந்திய அணியின் மிகமுக்கியமான வீரராக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துடன் அவருக்கு இந்திய அணியின் கதவுகள் மூடப்பட்டன.

ஆசியப் போட்டிகள் அணி, இந்தியா ஏ அணி, துலீப் டிராபி என்று எந்த அணியிலும் பிரித்வி ஷா சேர்த்து கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் பிரித்வி ஷா தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அங்கும் காயம் காரணமாக விளையாடாமல் வெளியேறினார். பின்னர் ஓய்வில் இருந்த பிரித்வி ஷா, இராணி கோப்பையில் மும்பை அணிக்காக களமிறங்கினார்.
அந்த போட்டியில் 4 மற்றும் 76 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா, ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், அவர் 7, 12, 1 மற்றும் 39 என்று மொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பது சாதாரண விஷயம் தான் என்றாலும், அவர் சில சேட்டைகளையும் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் தொடர்பாக மும்பை தேர்வுக் குழுவினரிடம் பேசுகையில், பிரித்வி ஷா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்சிஏ விதிகளின் படி ஒரு வீரருக்கு உடலில் 35 சதவிகிதம் வரை தான் கொழுப்பு இருக்க வேண்டும்.
ஆனால் பிரித்வி ஷா கொஞ்சம் கூட ஃபிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். அவர் என்சிஏ பயிற்சியாளர்களுடன் தொடர்ந்து 2 வாரங்கள் ஃபிட்னஸ் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடல் எடையில் மாற்றம் வந்த பின்னர் தான் மும்பை அணியில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல் பயிற்சியில் பிரித்வி ஷா கவனம் செலுத்துவதில்லை.
வலைப் பயிற்சியில் கொஞ்சம் கூட சிரத்தன்மையுடன் பங்கேற்பதில்லை. பல நேரங்களில் வலைப் பயிற்சியில் பங்கேற்காமல் தவிர்க்கிறார். பயிற்சிக்கு வந்தாலும் 2 செஷன்களை தவறவிடுகிறார். இதன் காரணமாக தேர்வுக் குழுவினர் மட்டுமல்லாமல் கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் பிரித்வி ஷாவை நீக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.