பிரித்வி ஷாவின் சேர்ப்பு
இந்த அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டது தான் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த பிரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் அதிரடி காட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் அணிக்குள் சேர்த்துள்ளது பிசிசிஐ. ஆனால் அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது கடினம் ஆகும்.
என்ன காரணம்
தற்போது உள்ள இந்திய அணியில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட நிறைய ஓப்பனர்கள் உள்ளனர். இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் ஹூடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெயிக்வாட் கடைசி நேரத்தில் வெளியேறினார். இப்படி ஓப்பனிங்கிற்கு உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கும் நேரத்தில் பிரித்வி ஷாவை கொண்டு வரமாட்டார்கள்.
புதுமுகம் இல்லை
முதல் விக்கெட்டிற்கு களமிறக்கிவிடலாம் என்று பார்த்தால் ராகுல் திரிபாதி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். இவரை தவிர வேறு யாரும் புதுமுகங்கள் அணியின் ப்ளேயிங் 11ல் விளையாடுவதில்லை என்பதால் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஒருவேளை ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால், பிரித்வி ஷா வாய்ப்பு பெறலாம்.
பாண்ட்யாவின் திட்டம்
இந்திய அணி எப்போதுமே பெரிய மாற்றங்களை விரும்பாது. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்ற கேப்டன்களும், தோல்விக்கு பின்னும் பழைய ப்ளேயிங் 11ல் தொடர தான் விரும்புகிறார்கள். புதிதாக ஒரு வீரரை கொண்டுவந்து குழப்பம் ஏற்படுத்த மாட்டார்கள். எனவே பிரித்வி ஷாவையும் அதே போல நினைத்து உட்கார வைக்கப்படலாம்.