மும்பை: இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சச்சின் டெண்டுல்கர் ஆக உயர்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சிக்கி தவித்து வருகின்றார். இந்திய அணியில் இருந்து இடத்தை இழந்த பிரித்வி ஷா ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரில் கூட இடம் பெறாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இதற்கு பிரித்வி ஷாவின் தவறான பழக்க வழக்கங்கள், கிரிக்கெட் மீதான நாட்டம் போனதுதான் காரணம் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் என உறுதி எடுத்துக்கொண்ட பிரித்வி ஷா அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த பிர்திவி ஷா தமது மும்பை அணியில் இருந்து விலகி மகாராஷ்டிரா அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். இதனை அடுத்து ரஞ்சி கோப்பைக்கு முன் தமிழ்நாட்டில் நடத்தப்படும் புஜி பாபு கோப்பை தொடரில் பிரித்வி ஷா மகாராஷ்டிரா அணிக்காக விளையாடினார்.
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்த பிரித்விஷா தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஒரு கட்டத்தில் களத்தில் செட் ஆன பிறகு பவுண்டரி, சிக்ஸர்களை அடிக்க ஆரம்பித்தார். 14 பவுண்டரி, ஒரு சிக்சர் என அடித்த அவர் 122 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.
பிரித்விஷா சதம் அடித்தவுடன் அவரது அணி வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கைதட்டி வரவேற்றனர். 25 வயதான பிரித்விஷா தற்போது நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பிரித்வி ஷா கிரிக்கெட் மீது மீண்டும் கவனத்தை திருப்பினால், மீண்டும் அவர் புகழின் உச்சிக்கு செல்வார் என கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.