ப்ரித்விக்கு கணுக்காலில் காயம்
ப்ரித்வி ஷாவுக்கு பயிற்சிப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயற்சி செய்த போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவர், நடக்க முடியாமல் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில், ப்ரித்வி ஷா காயத்தில் இருந்து தற்போது வேகமாக குணமாகி வருவதாக ரவி சாஸ்திரி கூறினார்.
எப்போது குணமடைவார் ப்ரித்வி?
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது. அதில் ப்ரித்வி ஷா பெயர் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதில் ராகுல் துவக்க வீரராக, முரளி விஜய்யுடன் இணைந்து களமிறங்க உள்ளார். ராகுல் ரன் குவிப்பாரா? என்பது சந்தேகமாகவே உள்ள நிலையில், ப்ரித்வி ஷா எப்போது குணமடைவார் என ரவி சாஸ்திரியிடம் கேட்டனர் செய்தியாளர்கள்.
3வது டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கலாம்
அதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, ப்ரித்வி ஷா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். "ப்ரித்வியால் தற்போது ஓரளவு நடக்க முடிகிறது. இந்த வார இறுதிக்குள் அவரால் ஓட முடிந்தால் அது நல்ல முன்னேற்றமாக இருக்கும். பெர்த்-இல் நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புண்டு" என கூறினார்.
முரளி விஜய் - ராகுல் நிலை
ப்ரித்வி ஷா மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவர் காயம் குணமடையும் பட்சத்தில் நிச்சயம் அணியில் இடம் பிடித்துவிடுவார். அதுவரை இரண்டு போட்டிகளில் முரளி விஜய், ராகுல் தங்களை நிரூபிக்க நேரம் உள்ளது. முரளி விஜய் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் நீக்கப்பட்டு பின் போராடி அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் கடந்த பல போட்டிகளாக சொதப்பி வருகிறார். எனவே, இந்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.