புனே: இந்திய கிரிக்கெட்டில் மிகவும் திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்டு பல சாதனைகளை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் என்றால் அது பிரித்வி ஷாவுக்கு தான். எப்படி சச்சின், விராட் கோலி, ஆகியோர் சிறுவயதிலிருந்து சாதித்து வந்தார்களோ, அதே போல் பிரித்விஷாவும் பள்ளி கிரிக்கெட்டிலே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
அதன்பின் இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, அதன் பின் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் பிரித்வி ஷாவுக்கு, கிரிக்கெட் மீதான கவனம் சிதறியதை அடுத்து உடல் தகுதி, ஒழுக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவர் அணியை விட்டு நீக்கப்பட்டார்.

இதுபோன்று மும்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த அவர் அங்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததால் வேறு மாநில அணிக்கு செல்வதாக முடிவு எடுத்தார். இந்த நிலையில் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பிரித்வி ஷா, கடுமையாக உழைத்து வருகிறார்.
தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர் ரஞ்சி கோப்பை தொடரில் பெரியதாக சாதித்து மீண்டும் அணிக்குள் வர முடிவெடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை பயிற்சி ஆட்டம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா, அபாரமாக விளையாடி 220 பந்துகளில் 181 ரன்கள் அடித்தார்.
மேலும் ஆசின் குல்கர்னியுடன் இணைந்து 305 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தார். அப்போது பிரித்விஷாவின் விக்கெட்டை முசீர்கான் வீழ்த்தினார். பெரிய வீரரின் விக்கெட் வீழ்த்தி விட்டோம் என முசிர்கான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க அது பிரிதிவிஷாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.இதனை அடுத்து முஷீர் கானை நோக்கி பேட்டை வீச வந்த பிரத்விஷா அவருடன் மோதலில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அவருடைய ஜெர்சியை பிடித்து இழுக்க முயன்ற போது மற்ற வீரர்கள் உடனடியாக பிரித்வி சாவை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை கையை மீறி சென்ற நிலையில் அவரை நடுவர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். மேலும் பெவிலியன் நோக்கி சென்ற போது மும்பை அணியின் அனுபவ வீரர் சித்தார்த் உடன் பிரித்வி ஷா மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரித்வி ஷா தற்போது தான் ஃபார்முக்கு திரும்பி நன்றாக விளையாடி வரும் நிலையில், தற்போது களத்தில் தவறாக நடந்து கொண்டு இருப்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.